மோடிக்கு எதிரான விசாரணை கமிஷனுக்கு நீதிபதி நியமிப்பதை கைவிட்டது மத்திய அரசு!
சென்னை: இளம்பெண்ணை வேவு பார்க்க மோடி உத்தரவிட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, விசாரணை கமிஷனுக்கு நீதிபதியை நியமிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டது.
கடந்த 2009ல், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை வேவு பார்க்க அந்த மாநில முதல்வரும், பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி உத்தரவிட்டதாகவும், இதைத்தொடர்ந்து இதற்கான ஏற்பாடுகளை அவருக்கு நெருக்கமான அப்போதைய மாநில உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்ததாகவும் புகார் எழுந்து உள்ளது.
இதுபற்றி விசாரணை நடத்த விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது. விசாரணை கமிஷன் நீதிபதி மே 16-ந் தேதிக்குள் நியமிக்கப்படுவார் என்று கடந்த வாரம் மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபலும், உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயும் கூறினார்கள்.
இதற்கு பாரதீய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன் விசாரணை கமிஷனுக்கு நீதிபதியை நியமிக்க முயற்சிப்பது காங்கிரசின் தோல்வி பயத்தைக் காட்டுவதாகக் குற்றம் சாட்டியது.
அத்துடன் இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டிருக்கும் நிலையில், அதுபற்றி விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியது.
இந்த நிலையில், இளம்பெண்ணை வேவு பார்த்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த நீதிபதியை நியமிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி ஆகியவையும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இன்னும் இரு வாரங்களில் பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியாக இருக்கும் நிலையில், இப்போது விசாரணை நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்று தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரபுல் பட்டேல் கேள்வி எழுப்பினார்.
மேலும், இது தொடர்பாக சரத் பவார் நேற்று முன்தினம் பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்பு கொண்டு தனது கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்தார்.
இதேபோல் தேசிய மாநாடு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், காஷ்மீர் முதல்வருமான உமர் அப்துல்லா, விசாரணை கமிஷன் அமைக்க டிசம்பர் மாதம் முடிவு செய்த மத்திய அரசு, 5 மாதங்கள் கழித்து அதற்கான நீதிபதியை நியமிக்க முடிவு செய்வது தவறானது என்றும் கருத்து தெரிவித்தார்.
மத்திய அரசு கைவிட்டது
கூட்டணி கட்சிகளின் இந்த எதிர்ப்பு காரணமாக விசாரணை கமிஷனுக்கான நீதிபதியை நியமிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டது.
விசாரணை கமிஷனுக்கான நீதிபதியை நியமிப்பதை தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசின் முடிவுக்கு நாங்கள் விட்டுவிட்டோம் என்று நேற்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.