குஜராத் கலவரத்தை தடுக்க தவறிய மோடி ஒரு கோழை: சல்மான் குர்ஷித் கடும் தாக்கு
ஃபரூக்காபாத்: குஜராத் கலவரங்களை தடுக்க தவறிய அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி ஆண்மையற்றவர் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கடுமையாக சாடியுள்ளார். இந்த விமர்சனத்துக்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சல்மான் குர்ஷித் பேசியதாவது:
நாட்டின் பிரதமராக ஆசைப்படுகிற நபர் 2002ஆம் ஆண்டு கலவரத்தின் போது ஒன்றுமே செய்யவில்லையே? சில பேர் வந்தார்கள்.. தாக்கினார்கள்.. சென்றுவிட்டனர்.. ஏன் உங்களால் தடுக்க முடியவில்லை?
அதைத் தடுக்க முடியாத அளவுக்கு வலிமையற்ற மனிதரா நீங்கள்? நீங்கள்தான் அந்த மக்களைக் கொன்றதாக நாங்கள் குற்றம்சாட்டவில்லை.. நீங்கள் ஆண்மையற்றவர் என்றுதான் நாங்கள் குற்றம்சாட்டுகிறோம்.. உங்களால் கொலையாளிகளைத் தடுக்க முடியவில்லை..
இவ்வாறு சல்மான் குர்ஷித் மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக சாடினார்.
பாஜக கடும் கண்டனம்
குர்ஷித்தின் இந்த பேச்சுக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மோடியின் நெருங்கிய சகாவும் குஜராத் அமைச்சருமான ஜெய் நாராயண் வியாஸ், சல்மான் குர்ஷித்தின் இத்தகைய பேச்சு காங்கிரஸின் விரக்தியை வெளிப்படுத்துகிறது. இது அநாகரீகமான விமர்சனம். விரக்தியடைந்து போயிருப்பதால்தான் கட்டுப்பாட்டை இழந்து பேசுகின்றனர் என்றார்.
இதேபோல் பாஜகவின் மூத்த தலைவர் சுதன்ஷு மிட்டலும் சல்மான் குர்ஷித்தின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.