லோக்சபாவில் பாஜகவின் பெரும்பான்மைக்கு 'அக்னி பரீட்சையாக' வருகிறது 5 இடைத்தேர்தல்கள்!
லோக்சபாவில் பாரதிய ஜனதா கட்சியின் பெரும்பான்மைக்கு சோதனையாக வருகிறது 5 இடைத் தேர்தல்கள்.
Recommended Video
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தனிப் பெரும்பான்மைக்கு அக்னி பரீட்சையாக 5 லோக்சபா இடைத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளன.
லோக்சபாவில் பாஜகவுக்கு 274 எம்.பி.க்கள் உள்ளனர். 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக 282 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. அடுத்தடுத்த இடைத்தேர்தல்களில் தொடர் தோல்வியைச் சந்தித்ததால் பாஜகவின் பெரும்பான்மைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இல்லாமல் மொத்தம் 273 எம்.பிக்கள்தான் பாஜகவுக்கு உள்ளனர். பெரும்பான்மைக்கு தேவையான எம்.பி.க்கள் எண்ணிக்கை 272.
இடைத் தேர்தல் தொகுதிகள் விவரம்
இந்த நிலையில் அடுத்ததாக 5 லோக்சபா தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இத்தொகுதிகளுக்கான தேர்தல் தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. உத்தரப்பிரதேசத்தின் கைரானா, மகாரஷ்டிராவின் பல்ஹார், பந்த்ரா-கோண்டியா, ஜம்மு காஷ்மீரின் அனந்தாக், நாகாலாந்தின் நாகாலந்து லோக்சபா தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
பாஜக தொகுதிகள் 3
இதில் கைரானா, பல்ஹார், பந்த்ரா-கோண்டியா ஆகிய தொகுதிகளில் 2014 தேர்தலில் பாஜக வென்றது. அனந்தநாக் தொகுதியில் வென்ற மெகபூபா முப்தி ஜம்மு காஷ்மீர் முதல்வரானார். நாகாலாந்து தொகுதியில் வென்ற நெய்பியூ ரியோ அண்மையில் அம்மாநில முதல்வரானார்.
இடைத்தேர்தலை எதிர்கொள்ள தீவிரம்
உ.பியில் கோரக்பூர், புல்பூர் தொகுதிகளை அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக பறிகொடுத்தது. இதனால் மத்தியில் பாஜகவின் பெரும்பான்மை கேள்விக்குறியாகிவிட்டது. இதனால் கைரானா தொகுதியை தக்க வைக்க இப்போதே பாஜக தீவிரம் காட்டுகிறது. ஆனால் அங்கும் பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கை கோர்த்து களம் இறங்க உள்ளன. அத்துடன் காங்கிரஸையும் இணைத்துக் கொள்ளும் வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. இதனால் பாஜகவுக்கு மிகப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மைனாரிட்டி அரசு?
மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு மீது விவசாயிகள் மிகவும் அதிருப்தியில் இருக்கின்றனர். இதைத்தான் அண்மையில் நடைபெற்ற லட்சக்கணக்கானோர் பங்கேற்ற செங்கடல் பேரணி உணர்த்தியது. அனந்தநாக், நாகாலாந்து தொகுதிகளை பிடிபியும் என்பிஎப்பும் கைப்பற்ற முயற்சிக்கலாம். இரு கட்சிகளுமே பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிப்பவைதான். வரப்போகின்ற 5 இடைத்தேர்தல்களில் ஏற்கனவே 3 தொகுதிகளில் பாஜக வென்றாக வேண்டும். இல்லையெனில் லோக்சபாவில் பெரும்பான்மையை பறிகொடுத்துவிட்டு மைனாரிட்டி அரசாகத்தான் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியில் நீடிக்க முடியும்.