தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம்... திரையரங்கு உரிமையாளர்களுக்கு ரூ.60 கோடி அபராதம்
டெல்லி : உபஹார் திரையரங்கு தீ விபத்து வழக்கில் உரிமையாளர்கள் இருவருக்கு ரூ 60 கோடி ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் கிரீன்பார்க் உபஹார் திரையரங்கில் கடந்த 1997-ம் ஆண்டு, ஜூன் மாதம் 13-ந் தேதி பார்டர் என்ற சினிமா படம் திரையிடப்பட்டது.
அப்போது அந்த திரையரங்கின் பால்கனியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மூச்சு திணறி 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். விசாரணையில், பாதுகாப்பு விதிமுறைகள் எதுவும் முறையாக திரையரங்கில் கடைபிடிக்கப்படாது தெரியவந்தது.
தீ விபத்து ஏற்பட்டால் வெளியேறும் அவசர வழியை கூட அடைத்து லாப நோக்குடன் கூடுதல் இருக்கைகளை திரையரங்கில் அமைத்து இருந்தது கண்டறியப்பட்டது.
இது தொடர்பான சி.பி.ஐ. வழக்கில் திரையரங்கு உரிமையாளர்களான சுஷில் அன்சால் மற்றும் கோபால் அன்சால் ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த 2008 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக உரிமையாளர்கள் இருவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதையடுத்து இந்த வழக்கு மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் குற்றவாளிகள் 2 பேரும் ஏற்கனவே சிறைவாசம் அனுபவித்த காலத்தை தண்டனை காலமாகவும், தலா ரூ.30 கோடி அபராதம் விதித்தும் (மொத்தம் ரூ.60 கோடி) நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
இதன் காரணமாக சுஷில் அன்சால் மற்றும் கோபால் அன்சால் ஆகிய இருவரும் சிறை தண்டனையில் இருந்து தப்பினர். இந்த அபராத தொகையை அவர்கள் 3 மாத காலத்தில் டெல்லி மாநில அரசிடம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த தொகையை டெல்லி மாநில அரசு நலத்திட்டங்களுக்காக செலவிட வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளனர்.