தலித் வாலிபர் திருமண ஊர்வலம் தடுத்து நிறுத்தம்.. 'தீட்டு கழிக்க' ஹோமம்.. குஜராத்தில்
அகமதாபாத்: தலித் வாலிபரின் திருமண ஊர்வலத்தை தடுத்து நிறுத்திய, உயர் ஜாதியினர், அந்த வழியில் யாகம் நடத்திய சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.
குஜராத் மாநிலம், ஆரவள்ளி மாவட்டத்தின், கம்பியாஸ்ர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தலித் இளைஞர் மற்றும் அவரது உறவினர்கள் ஊர்வலமாக சென்றபோது, அதை, உயர் ஜாதிபிரிவான, பட்டிதார் சமூகத்தை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது இரு தரப்புக்கும் மோதல் வெடித்தது. கல்வீச்சு, கைகலப்பு என மோதல் அதிகரித்ததையடுத்து, காவல்துறையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில், மணமகன் ஊர்வலம் திருப்பியனுப்பப்பட்ட பிறகு, 'தீட்டு கழிப்பதற்காக', அங்கு ஹோமங்களை நடத்தியுள்ளனர் பட்டிதார் சமூக மக்கள். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல சபர்கந்தா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில், தாகூர் சமூக மக்கள், தலித் சமூகத்தைச் சேர்ந்த மணமகன், உள்ளூர் கோயிலில் வழிபட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கள் கிராமத்து வழியே, தலித் மணமகன் குதிரை மீது ஏறிச் செல்லவும், தாகூர் பிரிவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மணமகன் குடும்பத்தினர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன்பிறகு, காவல்துறை உதவியோடு, மணமகன் ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. கோயிலிலும் வழிபட்டு திரும்பியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் குஜராத்தில் நிலவும் ஜாதிய மனப்பாங்கை காட்டுவதாக அமைந்துள்ளது.