இன்டர்வியூக்கு இனி கடிதம்லாம் கிடையாது... ஒன்லி ஆன்லைன் “இ சம்மன்”தான்- யுபிஎஸ்சி அதிரடி!
டெல்லி: நாட்டின் உயரிய தேர்வுகளில் ஒன்றான சிவில் சர்வீஸ் தேர்வின் நேர்முக தேர்விற்கான அழைப்புக் கடிதம் இனி காகித வடிவில் அனுப்பப்படாமல் ஆன்லைன் மூலமாக தேர்வர்களை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு, முதல்நிலை, முதன்மை, நேர்முக தேர்வு என மூன்று நிலைகளாக நடத்தப்படுகிறது. முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகளில் தேறியவர்களுக்கு மார்ச் 8 ஆம் தேதி நேர்முக தேர்வு தொடங்குகிறது.
ஆனால், நேர்முக தேர்வுக்கு காகித வடிவிலான அழைப்பு கடிதம் அனுப்பப்பட மாட்டாது என்று இந்த தேர்வை நடத்தும் மத்திய பணியாளர் தேர்வாணையம் யு.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. அதற்கு பதில் தேர்வாணையத்தின் இணையதளத்தில் கடிதத்தை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.
பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள், நேர்முக தேர்வு தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்பு, தேர்வாணையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.