வாட்ஸ்அப்புக்கு போட்டியாக 'ஆப்' உருவாக்கிய ஹைதராபாத் சாப்ட்வேர் இன்ஜினியர் 'வலியின்றி' தற்கொலை!
ஹைதராபாத்: வாட்ஸ்அப் பாணியில் தான், உருவாக்கிய, சோஷியல் மீடியா ஆப், சரிவர பிரபலம் ஆகாத மன வருத்தத்தால், ஹைதராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் நைட்ரஜன் வாயுவை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஹைதராபாத் நகரிலுள்ள அமீர்பேட் பகுதியை சேர்தவர் லக்கி குப்தா அகர்வால் (33). நகரிலுள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். திருமணமாகாத லக்கி குப்தா தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவரின் சகோதரர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று லக்கி குப்தா அவரது அறைக்கதவை மாலை வரை திறக்கவேயில்லையாம். இதனால் சந்தேகமடைந்த அவரின் தந்தை, அறை கதவை பல முறை தட்டி, மகனை கூப்பிட்டுள்ளார்.
கதவை உடைத்து
அறைக்குள் இருந்து பதில் வராததால் பதற்றமடைந்த லக்கி குப்தா பெற்றோர், அந்த கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.
முகத்தில் மாஸ்க்
அறைக்குள் இருந்த படுக்கையில், லக்கி குப்தா மல்லாந்து படுத்த நிலையில் அசைவற்று கிடந்தார். அவரது முகத்தில் மாஸ்க் மாட்டப்பட்டிருந்தது. அந்த மாஸ்க் ஒரு பைப் மூலம், அருகில் இருந்த 3 அடி உயர காஸ் சிலிண்டர் ஒன்றுடன் இணைக்கப்பட்டிருந்தது.
டாக்டர்கள்
உடனடியாக லக்கி குப்தாவை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
கடிதம்
போலீசார் லக்கி குப்தா வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, அவர் நைட்ரஜன் காசை சுவாசித்து தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. அவர் எழுதிய தற்கொலை கடிதத்தையும் காவல்துறை கண்டெடுத்தது.
நெட்டில் தேடல்
லக்கி குப்தா அந்த கடிதத்தில், வலியே இல்லாமல் சாகும் லக்கி மேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது லேப்டாப்பை சோதித்து பார்த்தபோது, வலி இன்றி தற்கொலை செய்வது எப்படி என சில நாட்களாக அவர் சர்ச் செய்து பார்த்தது தெரியவந்தது.
நைட்ரஜன் வாயு
நைட்ரஜன் வாயுவை சுவாசித்தால் வலியின்றி உயிர் பிரியும் என்று படித்து தெரிந்து கொண்டு இவ்வாறு அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
வாட்ஸ்அப்புக்கு போட்டி
இதுகுறித்து அவரது குடும்பத்தார் கூறுகையில், லக்கி குப்தா, வாட்ஸ்அப் மாதிரியில் ஒரு சமூக வலைத்தள ஆப் உருவாக்கியதாகவும், அது மக்களிடம் பிரபலமடையவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த பல நாட்களாகவே லக்கி குப்தா, வருத்தபட்டு புலம்பியதாக கூறியுள்ளனர். வாட்ஸ்அப்பையே மறக்கடிக்கும் வகையிலான ஆப் அது என்று லக்கி குப்தா கூறிவந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.