எழுத்தாளர் அனந்தமூர்த்தி மறைவு: கர்நாடகாவில் 3 நாள் துக்கம், இன்று அரசு விடுமுறை
பெங்களூர்: எழுத்தாளர் யு.ஆர்.அனந்த மூர்த்தி மறைவையொட்டி கர்நாடகாவில் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகள் பாதியிலேயே வீடு திரும்பினர்.
ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் அனந்தமூர்த்தி நேற்றிரவு காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் சித்தராமையா, பிரதமர் நரேந்திரமோடி, எடியூரப்பா, தேவகவுடா உள்ளிட்ட பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவை பொறுத்தளவில் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு சமூகத்தில் மிக உயரிய மதிப்பு அளிக்கப்படும். பொது மேடைகளில் முதல்வரை வைத்துக்கொண்டே எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் அரசை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்ய முடியும். சட்டையை பிடித்து இழுத்து கேட்காத குறையாக எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் தங்களது தார்மீக கோபத்தை முதல்வர், அமைச்சர்கள் மீது காட்ட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல சம்பவங்களை உதாரணமாக கூற முடியும்.
இந்நிலையில், எழுத்தாளர் அனந்தமூர்த்தி மறைவையொட்டி, மாநில அரசு மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மூன்று நாட்களும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும். மேலும், சனிக்கிழமையான இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையையொட்டி பெங்களூர், மைசூர் உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. விடுமுறை அறிவிப்பு நேற்றிவு வெளியானதால் பல இடங்களில் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு கிளம்பினர், ஆனால் தொலைக்காட்சி, இணையதளங்கள் மூலமாக தகவலை அறிந்து கொண்டு வீடுகளில் முடங்கினர்.