யூரி தாக்குதல்.. பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பியது இந்தியா !
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி செக்டாரில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்துக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி செக்டாரில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்திற்குள் புகுந்து 4 தீவிரவாதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவத்தினர் அந்த 4 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றுவிட்டனர். இருப்பினும் இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இதையடுத்து இந்தியாவிற்குள் ஊடுறுவ முயன்ற 15 தீவிரவாதிகளில் 10 பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். மீதமுள்ள 5 பேரை ராணுவத்தினர் தேடி வருகின்றனர்.
இதனிடையே இந்த தாக்குதலுக்கு காரணமான லக்ஸர்-ஈ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முப்படை ராணுவ தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து மோடி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்துக்கு இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்ஷங்கர் சம்மன் அனுப்பியுள்ளார். அதில் யூரி தாக்குதல் சம்பவம் குறித்து மத்திய அரசின் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப், உரிய விளக்கம் அளிக்கும்படி பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை அறிவுறுத்தியுள்ளதாகக் கூறினார்.