யூரி தாக்குதல்: பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து ஆதாரங்களை அளித்தது இந்தியா
டெல்லி: யூரி தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தொடர்பு குறித்த ஆதாரங்களை இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்ஷங்கர், பாகிஸ்தான் தூதரிடம் வழங்கினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி செக்டாரில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்திற்குள் புகுந்து 4 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய ராணுவத்தினரின் பதில் தாக்குதலில் அந்த 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இதன் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக மத்திய அரசு கூறிவந்த நிலையில், பாகிஸ்தான் அதனை மறுத்தது. யூரி தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஐ.நா.,விலும் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா பேசினார்.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்ஷங்கர், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை நேற்று நேரில் அழைத்தார். அப்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 2 பேர், பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ உதவியது குறித்த ஆதாரங்களை வழங்கினார்.
அந்த இரண்டு நபர்களை யூரி பகுதியில் உள்ள மக்கள் பிடித்து, அவர்களை இந்திய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்ததாகவும், அவர்கள் தற்போது தேசிய புலனாய்வு பிரிவு போலீஸ் கட்டுப்பட்டில் உள்ளதாகவும் அப்துல் பாசித்திடம் ஜெய்ஷங்கர் கூறியுள்ளார். மேலும், இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெய்ஷங்கர், அப்துல் பாசித்திடம் வலியுறுத்தியுள்ளார்.