யூரி தாக்குதலுக்கு பதிலடி.. பாக். எல்லை புகுந்து தாக்குதல்? ராணுவ உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனை
டெல்லி: காஷ்மீர் மாநிலம் யூரியில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 17 பேர் வீர மரணமடைந்தனர். பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு தக்கபதிலடி கொடுக்க இந்திய உயர் அதிகாரிகள் இன்று டெல்லியில் அவசர ஆலோசனை நடத்த உள்ளனர்.
ராணுவம், உளவுத்துறை, பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவான 'ரா' அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். பாகிஸ்தானுக்கு தக்கபதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்பது பல அதிகாரிகளின் நோக்கமாக உள்ளது.
எல்லை கட்டுப்பாட்டு பகுதிக்கு அருகே பாகிஸ்தான் மண்ணில், தீவிரவாத குழுக்கள் முகாமிட்டுள்ளன. இந்த முகாம்களை விமானப்படை மூலம் தாக்கி அழிக்க தயாராகிவருகிறது இந்திய ராணுவம்.
வெற்றி நிச்சயம்
அதேநேரம், இந்த தாக்குதல் 100 சதவீதம் வெற்றியை தர வேண்டும். ஏனோ தானோ.. என்ற வகையிலான தாக்குதலாக இது அமைந்துவிடக்கூடாது. எடுத்த செயலில் முழு வெற்றி பெற்று தீவிரவாதிகள் பூண்டோடு ஒழிக்கப்பட்டதாக வேண்டும் என்பதுதான் இப்போது ராணுவம் முன்பிருக்கும் சவால்.
பயத்தால் கைவிடப்பட்டது
2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் பெரும் தாக்குதலை நடத்தியபோதே, இப்படி ஒரு யோசனை முன் வைக்கப்பட்டது. ஆனால், பதில் தாக்குதலால் 100 சதவீத வெற்றியை பெற முடியாது என்று உளவுத்துறை எச்சரித்ததால் திட்டம் கைவிடப்பட்டது. இப்போதும், உளவுத்துறை சரியான தகவல்களை அளித்தால் 100 சதவீதம் வெற்றி நிச்சயம் என்கிறார் விமானப்படை தளபதி.
மோடி கையில் சுவிட்ச்
இந்த சூழ்நிலையில், டெல்லியில் இன்று நடைபெறும் மீட்டிங் முக்கியத்துவம் பெறுகிறது. ஆலோசனையில் ஒரு முடிவை எடுத்தபிறகு, பிரதமர் நரேந்திர மோடியிடம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திட்டத்தை பவர் பாயிண்ட் போட்டு காட்டுவார். தாக்குதலுக்கு பிரதமர் ஓ.கே.சொன்னதும், பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படை புகுந்து குண்டு மழையை பொழியும்.
இரு நாட்கள்
இந்த முடிவை எட்டுவதற்கு முன்பாக, அடுத்த இரு நாட்களுக்கு தாக்குதல் திட்டம் பற்றி ஸ்கெட்ச் தீட்டப்பட உள்ளதாக டெல்லி பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்திய ராணுவ வீரர்களின் உயிர் தியாகம், வீணாக போகாது.. என பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.