"டெட்டால்" போல் "உச்சா"வும் கூட சூப்பர் கிருமி நாசினி தான்... இப்படிச் சொல்வது லாலு!
பாட்னா: டெட்டாலைப் போல் சிறுநீரும் சிறந்த கிருமி நாசினி தான் என பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் ஹோமியோபதி அறிவியல் மாநாடு நடைபெற்றது. இதில், அம்மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலுபிரசாத் யாதவ் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பக்கவிளைவில்லாத ஹோமியோபதி...
ஆங்கில முறை மருத்துவம் என்பது அறுவை சிகிச்சை மட்டும்தான். ஆனால், ஹோமியோபதி மருத்துவ முறையில் ஒவ்வொரு நோயையும் குணப்படுத்த முடியும். இதில் பக்க விளைவுகள் கிடையாது.
சிறுநீரும் கிருமி நாசினி தான்...
முன்பெல்லாம் நாம் சிறுவர்களாக இருந்தபோது ஏதாவது காயம் ஏற்பட்டால் உடனே காயத்தில் சிறுநீர் விடுவோம். இது காயம்பட்ட இடத்தில் கிருமி நாசினியாக செயல்பட்டு, அந்த காயம் புண்ணாக மாறாமல் தடுத்தது.
டெட்டால்...
அவசர காலத்தில் சிறுநீர் நமக்கு மருந்தாக பயன்பட்டது. ஆனால், இப்போது மக்கள் டெட்டால் பயன்படுத்துகிறார்கள். அதைக் கொண்டு கை கழுவுகிறார்கள்.
அவசர காலத்தில்...
இதுதான் நமது முன்னேற்றம். ஆனால், டெட்டாலை போல் சிறுநீரும் அவசர காலங்களில் பயன்படுத்தக் கூடியதுதான்" எனத் தெரிவித்தார்.
சிரிப்பு...
"லொல்லு" பிரசாத் லாலுவின் இந்தப் பேச்சைக் கேட்டு, அந்த அரங்கில் இருந்தவர்கள் அனைவரும் "கொல்" என்று சிரித்தனர்.
மகன் பிசி...
இந்த மாநாட்டில் மாநில சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் லாலுவின் மகன் தேஜபிரதாப் தான் கலந்து கொண்டு பேசுவதாக இருந்தது. ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி லாலுவிடம் கேட்டபோது, ‘சுகாதாரத்துறை அமைச்சர் பிசியாக இருக்கிறார். அதனால் நான் வந்தேன்' என்றார்.