எச்1பி விசா கட்டுப்பாடு.. அமெரிக்கா நிர்வாக ஆணை வழங்கவில்லை - மத்திய அரசு
எச்1பி விசா மசோதா குறித்து இதுவரை எந்த நிர்வாக ஆணையையும் அமெரிக்கா பிறப்பிக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி: எச்1பி விசா மசோதா குறித்து இதுவரை எந்த நிர்வாக ஆணையையும் அமெரிக்கா பிறப்பிக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. முன்கூட்டியே எந்த முடிவுக்கும் மக்கள் வரவேண்டாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இன்றி பணிக்காக செல்கிறவர்களுக்கு அந்த நாட்டு அரசு 'எச் 1 பி' விசா வழங்கி வருகிறது. இந்த விசாக்கள் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடையே இந்த விசாக்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோவதாக புகார்கள் கிளம்பியது.
இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் அதை ரத்து செய்வேன் என டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். தற்போது அவர் வெற்றி பெற்று, அதிபராகிவிட்டார். இதையடுத்து எச்1பி விசா சீர்திருத்த மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த மசோதாபடி, இனிமேல் வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு தொழில் நிமிர்த்தமாக வரும் பணியாளர்கள் எச்-1பி விசா பெற வேண்டுமானால், அந்த ஊழியருக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 130,000 டாலருக்கு மேல் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
இப்போதுள்ள நடைமுறைப்படி இந்த ஊதியம் 60,000 அமெரிக்க டாலராக உள்ளது. புதிய எச்-1பி விசா சட்ட மசோதாவால் அதை பெற வேண்டுமானால், அந்த ஊழியர்கள் தற்போதுள்ள ஊதியத்தைவிட இரட்டை மடங்குக்கு மேல் ஊதியம் பெற வேண்டும். இதனால் இந்தியா போன்ற வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை அழைத்துச் செல்லும் செலவு அதிகரிக்கும் என்பதால் ஐ.டி. நிறுவனங்கள் அமெரிக்காவிலுள்ள உள்ளூர் பணியாளர்களையே அந்த பணிக்கு நியமித்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
மேலும், அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த மசோதாவினால், வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்பு வெகுவாக குறையும். குறிப்பாக இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்களுக்கு கடும் பாதிப்பு உண்டாகும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தநிலையில் எச்1பி விசா மசோதா குறித்து இதுவரை எந்த நிர்வாக ஆணையையும் அமெரிக்கா அரசு பிறப்பிக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து முன்கூட்டியே எந்த முடிவுக்கும் மக்கள் வரவேண்டாம் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.