அமெரிக்கா அதிபர் டிரம்ப் நாளை இந்தியா வருகை- உற்சாக வரவேற்பளிக்க பிரமாண்ட ஏற்பாடுகள்
அகமதாபாத்: அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை 2 நாட்கள் பயணமாக இந்தியா வருகை தருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பளிக்க அகமதாபாத், டெல்லியில் விரிவான பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்கா அதிபர் டிரம்ப் நாளை முதலில் குஜராத் மாநிலத்துக்கு வருகை தருகிறார். அகமதாபாத் விமான நிலையத்தில் டிரம்ப் தலைமையிலான குழுவினருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் நாட்டுப்புறக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து உலகின் மிகப் பெரிய மைதானமான மோதிரா மைதானத்துக்கு டிரம்ப் செல்கிறார். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து விளையாட்டு மைதானம் வரை பல லட்சக்கணக்கானோர் டிரம்ப் உள்ளிட்ட குழுவினரை வரவேற்க உள்ளனர்.
சட்டம் ஒழுங்கு சீர்குலையும் எனில் உங்கள் ரசிகர்கள் யார்? இது எப்படி இருக்கு? ரஜினியை ஓட்டிய சீமான்
ஏற்கனவே டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. முதலில் மகாத்மா காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்துக்கு டிரம்ப் குழுவினர் செல்கின்றனர். பின்னர் மோதிரா மைதானத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் டிரம்ப்.
இதன் பின்னர் ஆக்ரா சென்று தாஜ்மஹாலை டிரம்ப் குழுவினர் பார்வையிடுகின்றனர். இப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி செல்லும் டிரம்ப், நாளை மறுநாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசுகிறார். டிரம்ப் குழுவினருக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து அளிக்கப்படுகிறது.
டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியடிகள் நினைவிடத்தில் டிரம்ப் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இப்பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இரவு 10 மணிக்கு டெல்லியில் இருந்து அமெரிக்கா திரும்புகிறார் டிரம்ப்.
டிரம்ப்பின் வருகையை முன்னிட்டு குஜராத், டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.