நீங்க முதலைகிட்டயிருந்து தப்பிச்சீங்களாமே.. சொல்லவே இல்லை: மோடியிடம் கேட்ட ஒபாமா!
டெல்லி: முதலையிடமிருந்து ஒருமுறை பிரதமர் நரேந்திர மோடி உயிர் தப்பியது குறித்து எனக்குத் தெரிய வந்து நான் பெரும் வியப்படைந்தேன் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார்.
குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அளித்த இரவு விருந்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
66வது குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக, 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. தனி விமானம் மூலம் நேற்று காலை டெல்லி வந்தடைந்த ஒபாமாவிற்கு, இரவு பிரணாப் முகர்ஜி தனது மாளிகையில் விருந்தளித்தார்.
இந்த விருந்தில் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், உ.பி, முதல்வர் அகிலேஷ் யாதவ், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, நோபல் பரிசு பெற்ற சத்யார்த்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் பேசிய பிரணாப் முகர்ஜி, ‘இன்று நாம் வரலாற்று சாதனை நிகழ்த்தியதற்காக பெருமைப்படுவதாகவும், இந்தியா அமெரிக்கா உறவு சிறப்பான ஒன்று' எனவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய ஒபாமா, பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
‘பிரதமர் மோடி மிகவும் உறுதியானவர். தனது தாயாருடன் சேர்ந்து டீக்கடைக்காரராக இருந்த மோடி, இந்தியாவின் பிரதமராக உயர்ந்துள்ளார். இது அசாத்தியமானது, மிகப் பெரிய சாதனையாகும்.
அவர் ஒருமுறை முதலை தாக்குதலில் இருந்து தப்பித்தவர் என்று நான் கேள்விப்பட்டேன். இதுவரை நான் அறியாதது அது.
இன்றைய இரவு மோடி குர்தா போட வேண்டும் என்று நான் நினைத்ததுண்டு. அந்த அளவுக்கு அது என்னைக் கவர்ந்துள்ளது.
எனது சாதனையை அமெரிக்காவில் மட்டுமே சாதிக்க முடியும். அதேபோல மோடியின் சாதனையை இந்தியாவில் மட்டுமே சாதிக்க முடியும். இருவரின் சாதனையும் இரு நாடுகளிலும் அசாதாரணமானது.
பிரதமர் மோடி தினசரி 3 மணி நேரம் மட்டுமே தூங்குவதாக என்னிடம் தெரிவித்தபோது நான் ஆச்சரியம் அடைந்தேன். நான் அவரை விட மோசம். தினசரி 5 மணி நேரம் நான் தூங்குகிறேன் என்றார்.
‘நமஸ்தே' என்ற வார்த்தையுடன் தனது உரையைத் துவக்கிய ஒபாமா, இந்தியாவில் தனக்கு அளிக்கப் பட்டு வரும் உபச்சாரத்திற்கு நன்றி' தெரிவித்தார்.