பணம் வேண்டாம், பார்ட்டி வேண்டாம்.. பாத்திரம் கழுவுவதே சந்தோஷம்.. ஆச்சரிய அமெரிக்கப் பெண்
சண்டிகர்: இந்த அமெரிக்கப் பெண் பயங்கர வித்தியாசமாக இருக்கிறார். அதை விட அவர் பூண்டுள்ள கோலம்தான் பயங்கர ஆச்சரியமாக இருக்கிறது. பெரும் செல்வந்தர் வீட்டுப் பெண்ணான இவர், அமெரிக்காவின் பகட்டான வாழ்க்கையை அப்படியே தூக்கிப் போட்டு விட்டு, ஹரியானாவைச் சேர்ந்த ஒரு விவசாயியைய கட்டிக் கொண்டு அவர் வீட்டில் பத்து பாத்திரம் தேய்த்து சந்தோஷித்து வருகிறார் என்றால் ஆச்சரியம் வராதா என்ன...
எல்லாம் காதல்தான் காரணம்.. அதுவும் பேஸ்புக் மூலம் பிறந்த காதல்... அந்தக் காதல்தான் இன்று இந்திய விவசாயியுடன், அவரது வாழ்க்கையையும் சேர்த்து மணந்து கொண்டு இந்தியப் பெண்ணாகாவே மாறி போய் நிற்கிறார் அட்ரியானா பரேல் என்ற இந்த 41 வயதுப் பெண்.
இவரது காதல் கதையும், இப்போதைய திருமண வாழ்க்கையும் வியக்க வைப்பது.. இந்திய திருமண பந்தம், இந்தியப் பாரம்பரியத்தை நினைத்து சிலிர்க்க வைப்பதாக உள்ளது.
கலிபோர்னியா காதல்
அட்ரியானா கலிபோர்னியாவைச் சேர்ந்தவர். பேஸ்புக் மூலம் இவர் ஹரியானாவைச் சேர்ந்த முகேஷ் குமாருடன் நட்பு கொண்டார். இது பின்னர் காதலாக மாறியது.
வரவேற்பாளர்
அட்ரியானா வரவேற்பாளராக கலிபோர்னியாவில் பணியாற்றி வந்தவர். முகேஷுடன் ஏற்பட்ட காதலால் அவர் அவரைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இந்திய முறைப்படி திருமணமும் நடந்தேறியது.
மாமியார் வீட்டில் வலது கால் வைத்து
ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள தனது கணவரின் வீட்டுக்கு அதாவது மாமியார் வீட்டுக்கு வலது காலை வைத்து வந்து சேர்ந்தார். வந்த வேகத்தில் அத்தனை பேரின் அன்பையும் வாரிக் கொண்டு விட்டார், இந்தியப் பெண்ணாகவே உணர்வுப்பூர்வமாகும், உடையிலும் மாறி.
வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்கிறார்
அட்ரியானா தனது கணவர் வீட்டுக்கு வந்தது முதலே வீட்டு வேலைகளை தானே இழுத்துப் போட்டுச் செய்கிறாராம். பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது என்று ஒரு வேலையையும் அவர் விடுவதில்லை. மிகவும் சந்தோஷத்துடன் இதைச் செய்கிறாராம்.
எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது
இதுகுறித்து அட்ரியானா கூறுகையில், எனக்கு இந்த வாழ்க்கை நிறையவே பிடித்திருக்கிறது. முகேஷுடன் இருக்கும் நிமிடங்கள் சொர்க்கத்திற்குச் சமமானவை. இந்த வாழ்க்கையை இழக்கவே கூடாது என்று பிரார்த்தித்தபடி இருக்கிறேன் என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
ஏற்கனவே திருமணமானவர்
இத்தனைக்கும் அட்ரியானா ஏற்கனவே திருமணமாகி தனது கணவரைப் பிரிந்தவர். இவருக்கு 25 வயது மகளும் உள்ளார். ஆனால் முகேஷுடன் வாழ்வதற்காக மகள் உள்ளிட்ட குடும்பத்தினரை பிரிந்து வந்து விட்டாராம்.
கதறியழுத மகள்
இதுகுறித்து அட்ரியானா கூறுகையில், எனது மகள் கதறி அழுதாள். எனக்கு ஏதாவது நடந்து விடும் என்று பயந்தாள். ஆனால் என்னால் முகேஷைப் பிரிந்து இருக்க முடியாது. எனவேதான் வந்து விட்டேன் என்கிறார். கடந்த நவம்பர் மாதம்தான் இவர்களின் திருமணம் நடந்ததாம்.
குழந்தை பெத்துக்க ஆசை
அட்ரியானா தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்துக் கூறுகையில், நான் முகேஷ் மூ்லம் குழந்தை பெற்றுக் கொள்ள ஆர்வமாக உள்ளேன். முகேஷம் அதே எண்ணத்தில்தான் உள்ளார். எதிர்காலத்தில் எனது கணவருடன் நான் அமெரிக்கா திரும்பவும் வாய்ப்புள்ளது என்றார்.