வெள்ளத்தில் சிக்கிய தாய், குழந்தையை காப்பாற்றிய சிறுவன்... வீர தீர செயலுக்காக விருதுக்கு பரிந்துரை
திஸ்பூர்: அசாமில் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணையும் குழந்தையையும் காப்பாற்றிய 11 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதிலும் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இந்நிலையில், சோனிட்பூர் பகுதியில் உள்ள ஆற்றை தாய் மற்றும் 2 குழந்தைகள் கடக்க முயன்றனர். அப்போது நீரின் அளவு திடீரென அதிகரித்தது. இதனால் குழந்தைகளுடன் தாயும் ஆற்றில் விழுந்து சிக்கிக் கொண்டார்.
இதனை கண்ட, மிசாமாரி பகுதியை சேர்ந்த11 வயது சிறுவன் உத்தம் டடி, சற்றும் தாமதிக்காமல் வெள்ளத்தில் குதித்து நீந்திச் சென்று தாயையும், குழந்தையையும் மீட்டார். ஆனால் மூன்றரை வயது குழந்தையான தீபிகாவை மட்டும் மீட்க முடியாமல் போனதால் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
தன் உயிரைப் பொருட்படுத்தாது வெள்ளத்தில் குதித்து பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்றிய சிறுவன் உத்தம் டடிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மாநில பேரிடர் மீட்புப் படையும், கிராமத்து மக்களும் சேர்ந்து குழந்தை தீபிகாவின் சடலத்தை மீட்டனர்.
Sonitpur: Uttam Tati (pic 1),a 11-year-old boy from Missamari saved a woman & her child from drowning in the river on July 7. Lakhya Jyoti Das,District Magistrate,says,"the woman was trying to cross a small river with her 2 kids when water in the river suddenly increased." #Assam pic.twitter.com/YcvmPYTVqA
— ANI (@ANI) July 9, 2019
இந்தநிலையில், சிறுவனின் தைரியத்தை கேள்விப்பட்ட மாவட்ட நீதிபதி லக்கியா ஜோதி தாஸ், சிறுவனை பாராட்டினார். அத்துடன், வீர தீரத்துக்கான விருதுக்கு சிறுவன் உத்தம் டடியின் பெயரை பரிந்துரைத்து உள்ளேன் எனவும் தெரிவித்தார்.