சர்ச்சைகள் எதிரொலி.. தாஜ்மகாலுக்கு விசிட் அடித்து சுத்தம் செய்த யோகி ஆதித்யாநாத்
உத்தரப்பிரதேச அரசு தாஜ்மஹாலை சுற்றுலா தலங்களின் பட்டியலில் இருந்து நீக்கியதை அடுத்து தற்போது முதல் முறையாக தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் செல்ல இருக்கிறார்.
ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மஹாலை நீக்கி சொல்லி சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத். இந்த உத்தரவு உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தாஜ்மஹால் முகாலய அரசால் கட்டப்பட்டது அது இந்தியக் கட்டிடக் கலை இல்லை என்பதால் , தாஜ் மஹால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. பாஜக கட்சியை சேர்ந்த பலரும் யோகி ஆதித்யாநாத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது முதல் முறையாக தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் சென்று இருக்கிறார். அவர் தாஜ்மஹாலை பார்வையிட்டு, சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.
பட்டியலில் இருந்து நீக்கம்
உ.பி.யில் புதிதாக பதவியேற்றுள்ள யோகி ஆதித்யாநாத் தலைமையிலான அரசு சில வாரங்களுக்கு முன் தாஜ்மாஹாலை அவர்களது சுற்றுலா தலங்களின் பட்டியலில் இருந்து நீக்கியது. அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ பட்டியலில் இருந்தும் தாஜ்மஹால் நீக்கப்பட்டது. தாஜ்மஹால் முகாலய அரசால் கட்டப்பட்டது அது இந்தியக் கட்டிடக் கலை இல்லை என்பதால், தாஜ் மஹால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.
பெரும் பிரச்சனை ஆனது
இந்த நிலையில் யோகி ஆதித்யாநாத்தின் இந்த முடிவு இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கேரள சுற்றுலாத்துறை இதை பற்றி டிவிட்டுகள் செய்திருந்தது. சினிமா நடிகர்கள் பலர் இந்த முடிவுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் மக்களே பல பேர் இதற்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தனர். பாஜக தலைவர்களில் சிலர் அது ஒரு இந்து கோவில் சிவனுக்காக கட்டப்பட்டது என்றும் கருத்து தெரிவித்தனர். இன்னும் சிலரோ அது முகாலய கட்டிடம், இந்திய பாரம்பரியத்திற்கு சொந்தமானது அல்ல என்றும் கூறியிருந்தனர்.
தாஜ்மஹாலில் பார்க்கிங் நீக்கம்
இந்த நிலையில் தாஜ்மஹாலுக்கு சில நாட்களுக்கு முன் யாரோ குண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தனர். இதன் காரணமாக அங்கு ஒருநாள் முழுக்க சோதனை நடத்தப்பட்டது. அதற்கு மறுநாளே உத்தரபிரதேச அரசு தாஜ்மஹாலுக்கு வெளியே இருந்த பார்க்கிங்கை நீக்க கூறி உத்தரவு பிறப்பித்தது. இந்த தொடர் அறிவிப்புகள் காரணமாக தாஜ்மஹால் அடிக்கடி செய்திகளில் அடிபட்டு வருகின்றது. மேலும் அந்த பகுதி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் காணப்படுகிறது.
யோகி ஆதித்யாநாத் தாஜ்மஹால் சென்றார்
இந்த நிலையில் தற்போது தாஜ்மஹாலை பார்வையிடுவதற்காக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் சென்று இருக்கிறார். அவர் இன்று தாஜ்மஹாலில் அரை மணி நேரம் செலவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் தாஜ்மகாலை சுற்றிலும் சுத்தப்படுத்தும் பணிகளை அவர் மேற்கொண்டு இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் தாஜ்மாஹாலுக்கு ஏதாவது வளர்ச்சி சார்ந்து தேவைகள் ஏற்பட்டால் அவை செய்து தரப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து யோகி ஆதித்யாநாத் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் "தாஜ்மஹாலை யார் கட்டியிருந்தாலும், அது இந்திய மக்களின் உழைப்பால் மட்டுமே உருவாகியிருக்கும். அதற்கு மரியாதை செலுத்த வேண்டும். அதற்காகத்தான் தாஜ்மஹாலுக்கு சுற்றிப்பார்க்க செல்கிறேன்" என்று கூறியிருக்கிறார்..