உத்திர பிரதேசத்தில் 53 தொகுதிகளுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
உத்திரபிரதேசத்தில் 4ம் கட்டமாக 53தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி , நடைபெற்று வருகிறது.
லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில் 12 மாவட்டங்களில் உள்ள 53தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும்.
உத்திரபிரதேசத்தில் மொத்தம் 403 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதற்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்துவது என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
ஏற்கனவே 3 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் 12 மாவட்டத்தில் உள்ள 53 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக தேர்தல் நடைப்பெற்றி வருகிறது.
பலத்த பாதுகாப்பு
4ம் கட்டமாக தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் ஆணையம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும் வன்முறை நிகழாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு்ள்ளனர்.
தனியாக போட்டி
உ.பி-யில் பாஜகவும், பகுஜன் சமாஜ் கட்சியும் தனித் தனியாக களமிறங்கியுள்ளன. பாஜகக்கு உத்திரபிரதேச தேர்தலின் முடிவுகளை வைத்துதான் , அடுத்து வருகிற பாராளுமன்றத் தேர்தலை எப்படி கையாள்வது என்பது தெரியவரும். அதனால் பாஜகவுக்கு இந்த தேர்தல் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் பகுஜன் சாமாஜ் கட்சியும் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளது.
சமாஜ்வாடி - காங்கிரஸ் கூட்டணி
இந்த தேர்தலில் ஆளும் சமாஜ்வாடி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளது. சமாஜ்வாடி கட்சியில் அதிகாரச் சண்டை மேலோங்கி இருப்பதால், அகிலேஷ் யாதவ் எப்படியாவது ஆட்சியை பிடிக்கவேண்டும் என்று காங்கிரசுடன் கூட்டணி வைத்து களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரசாரம்
தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பாஜகக்கு ஆதரவாக 3 இடங்களில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 6 இடங்களிலும் பிரசாரத்தில் ஈடுபட்டார். பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் தீவிர பிரசாரம் செய்தார். சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி சார்பில் முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இருவரும் பல தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொண்டனர். மேலும் ராகுல்காந்தி சகோதரி பிரியங்கா காந்தியும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் 12 மாவட்டங்களில் உள்ள 53தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.