திடீரென விசிட் செய்த கலெக்டர்.. வசமாக சிக்கிக் கொண்ட ஆங்கில டீச்சர்.. பெரிய அசிங்கம்.. வைரல் வீடியோ
Recommended Video
டெல்லி: நமது நாட்டின் கல்வி, எந்த நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்று அச்சப்பட வைக்கும் அளவுக்கு நடந்துள்ளது ஒரு சம்பவம்.
இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்க வேண்டும், அப்போது தான் உலகம் முழுக்க, தங்கள் சிறகைவிரித்து சென்று வாழ்க்கையில் முன்னேற முடியும்.. புதிய அனுபவங்களை கற்க முடியும், என்று தென் இந்தியா, அதிலும் குறிப்பாக தமிழகம் எடுத்த முடிவு சரியானது என்பதை நிரூபிக்கிறது உத்தரபிரதேசத்தில் நடந்துள்ள இந்த ஒரு நிகழ்வு.
அப்படி என்ன நிகழ்வு என்கிறீர்களா? ஆங்கிலம் கற்றுத் தரக்கூடிய ஆசிரியைக்கு எழுத்துக்கூட்டி கூட ஆங்கிலம் வாசிக்க தெரியவில்லை என்ற அவல நிலை அங்கு நிலவுகிறது. இது வீடியோ ஒன்றில் பதிவாகி வைரலாக சுற்றி வருகிறது.
கல்வி நிலை
உத்தரபிரதேச மாநிலத்தில் கல்வி நிலை மிக மோசமாக இருக்கிறது என்று பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதற்கு லேட்டஸ்ட்டாக, ஒரு உதாரணம் அரங்கேறியுள்ளது. உன்னாவ் மாவட்டத்தில் உள்ள சிக்கந்தர்பூர் சரவுசி என்ற பகுதியில் அமைந்துள்ளது அந்தப் பள்ளிக்கூடம். அங்கே, மாவட்ட கலெக்டர் தேவேந்திர குமார் பாண்டே, ரெண்டு நாட்கள் முன்பாக, திடீரென விசிட் அடித்துள்ளார்.
வாசிக்க தெரியாத மாணவிகள்
அப்போது கலெக்டர், தேவேந்திர குமார், மாணவிகளிடம் பாடம் தொடர்பாக கேள்விகளை எழுப்பினார். ஆங்கில புத்தகத்தை அவர்களிடம் கொடுத்து அதை பார்த்து வாசிக்கச் சொல்லி உள்ளார். ஆனால், மாணவர்கள் நிலைமை பரிதாபகரமா இருந்துள்ளது. அவர்களால் புத்தகத்தை பார்த்து கூட ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்க முடியவில்லை. இதை பார்த்ததும்தான், கலெக்டருக்கு, ஒரு சந்தேகம் எழுந்தது. மாணவர்கள் இவ்வளவு மோசமாக இருக்கிறார்கள் என்றால், ஆசிரியை என்னதான் கற்றுத்தந்து இருப்பார் என்று நினைத்த அவர், ஆங்கில ஆசிரியை ராஜகுமாரி என்பவரை அழைத்து ஆங்கில புத்தகத்தை கையில் கொடுத்து, நீங்க வாசிங்க பார்ப்போம் என்று சொல்லியுள்ளார்.
டீச்சருக்கும் தெரியவில்லை
பெரிய கொடுமை என்னவென்றால் ஆங்கில ஆசிரியை, அந்த புத்தகத்தை வாங்கி விட்டு, அவரும் எழுத்துக்கூட்டி படிக்க தொடங்கினார். ஒவ்வொரு வரியையும் ஆசிரியை எழுத்துக் கூட்டி படிக்க, படிக்க, கலெக்டர் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். தனது அருகே நின்றுகொண்டிருந்த ஆரம்ப கல்வி அதிகாரி பிரதீப் குமார் பாண்டேவை நோக்கி, "இந்த ஆசிரியை உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படவேண்டும்.. ஒரு ஆங்கில ஆசிரியையாக இருந்து கொண்டு, ஆங்கிலத்தை பார்த்து வாசிக்க முடியவில்லையே இவருக்கு" என்று ஆவேசமாக கூறினார்.
|
வாசிக்க கூட தெரியாதா
அப்போது குறுக்கிட்ட, அந்த ஆசிரியை, மெல்லியகுரலில் ஏதோ ஒன்றை சொல்லி சமாளித்தார். ஆனால் அவரை, மேற்கொண்டு பேசவிடாமல் கலெக்டர் தடுத்துவிட்டார். 'அதனாலென்ன.. நீங்கள் பிஏ பாஸ் செய்துள்ளீர்கள் அல்லவா? நான் உங்களை மொழியாக்கம் செய்யுங்கள் என்று கூட கூறவில்லை. இதை அப்படியே பார்த்து படியுங்கள் என்றுதான் கூறினேன். ஆனால் அதை கூட உங்களால் செய்ய முடியவில்லை" என்று கோபத்துடன் கூறினார்.
கல்வி நிலை
இதுதொடர்பாக மாவட்ட ஆரம்பக் கல்வி அதிகாரி பிரதீப் குமார் பாண்டே கூறுகையில், மாவட்ட கலெக்டர் தனது அறிக்கையை சமர்ப்பித்த பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்றார். உத்தரபிரதேச மாநில கல்விக்கூடங்கள் சர்ச்சையில் சிக்குவது இது புதிது கிடையாது. சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில், மாணவர்களுக்கு கெட்டுப்போன பால் வழங்கப்பட்டதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.