தமிழ்நாட்டின் இந்த பாடத்திட்டம் சூப்பர்.. எங்க மாநிலத்தில் பின்பற்றுவோம்.. உ.பி. துணை முதல்வர்
சென்னை: உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா தமிழகத்தில் பின்பற்றப்படும் கல்விமுறைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக சென்னைக்கு வருகை தந்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் க்யூ.அர் குறியீடு முறை தமிழக பாடத்திட்டத்தில் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது. இந்தமுறை உள்பட பல சிறப்பு அம்சங்கள் உத்தரப்பிரதேச பள்ளிகளில் பின்பற்றப்படும் என்றார்.
உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா தமிழகத்தில் பின்பற்றப்படும் கல்விமுறைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு வருகை தந்தார். அவரை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளி கல்வி செயலர் பிரதீப் யாதவ மற்றும் கல்வி அதிகாரிகள் வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து துணை முதல்வர் தினேஷ் சர்மா கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டார். அந்த நூலகத்தில் உள்ள வசதிகள், குழந்தைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விளையாட்டுகள் குறித்து கேட்டறிந்தார். இதேபோல் பள்ளிகல்விக்கான பிரத்யேக தொலைக்காட்சி சேனல் குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
ஈரோடு மாணவன் யாசினுக்கு கவுரவம்.. 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்'
இதன்பின்னர் தமிழக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையனுடன் துணை முதல்வர் தினேஷ் சர்மா இருமாநில பள்ளி கல்விதுறைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் தினேஷ் சர்மா கூறுகையில், "பாடங்கள் குறித்த கூடுதல் தகவல்களை மொபைலிலேயே ஸ்கேன் செய்து அறிவதற்கான க்யூ.ஆர் குறியீடு முறை தமிழக பாடத்திட்டத்தில் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது. இந்தமுறை உள்பட தமிழக பாடத்திட்டத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் உத்தரப்பிரதேச பள்ளிகளில் பின்பற்றப்டும்" என்றார்
இதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. இருப்பினும் மாணவர்களின் எதிர்காலம் கருதி 412 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இதன் காரணமாக இந்த ஆண்டு அதிக அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்" என்றார்.