சித்தப்பா சிவ்பால் யாதவ் உள்ளிட்ட 4 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்த அகிலேஷ் யாதவ்- சமாஜ்வாடியில் சலசலப்பு
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தமது சித்தப்பா சிவ்பால் யாதவ் உட்பட 4 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆளும் சமாஜ்வாடி கட்சி உடையும் நிலை உருவாகி உள்ளது.
அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தாலும் சிவ்பால் யாதவுக்கு முழு ஆதரவை அளித்து வருகிறார் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ். அண்மையில் சிவ்பால் யாதவின் இலாகாக்களை பறித்து டம்மியாக்கினார் அகிலேஷ். அப்போது முலாயம்சிங் யாதவ் தலையிட்டு சமரசம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து முலாயம்சிங்கின் நண்பர் அமர்சிங் மீண்டும் சமாஜ்வாடியில் இணைந்தார். இதற்கு அகிலேஷ் யாதவ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனை வெளிப்படுத்தும் வகையில் அமர்சிங் ஆதரவாளரான நடிகை ஜெயப்பிரதாவை உ.பி. திரைப்பட வளர்ச்சி வாரிய துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கினார் அகிலேஷ் யாதவ்.
4 அமைச்சர்கள் டிஸ்மிஸ்
இதையடுத்து சிவ்பால் யாதவ் உட்பட 4 அமைச்சர்களை அதிரடியாக நீக்கினார் அகிலேஷ் யாதவ். இதனால் சமாஜ்வாடி கட்சி கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
முதல்வராக முலாயம்சிங்?
இதனிடையே சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளார் முலாயம்சிங் யாதவ். இக்கூட்டத்தில் முலாயம்சிங் யாதவ் சட்டசபை குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராகும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சட்டசபையை கலைப்பாரா?
அப்படி முலாயம்சிங் யாதவ் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியானால் சட்டசபையை கலைக்க ஆளுநருக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் பரிந்துரைக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் அமைச்சர்களில் பெரும்பாலானோர் முலாயம்சிங்கின் ஆதரவாளர்கள் என்பதால் சட்டசபையை கலைக்க அமைச்சரவையின் ஒப்புதல் கிடடக்குமா என்பதும் கேள்விக்குறிதான்.
தனிக்கட்சி?
தற்போதைய நிலையில் முலாயம்சிங் யாதவ் முதல்வர் பதவியை ஏற்பதால் மட்டுமே சமாஜ்வாடி கட்சியை காப்பாற்ற முடியும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதே நேரத்தில் தமது ஆதரவாளர்களுடன் சமாஜ்வாடி கட்சியில் இருந்து விலகி அகிலேஷ் யாதவ் தனிக் கட்சி தொடங்குவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.