6 முக்கிய தலைகள் ... நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் பிரதமர் நாற்காலி உ.பி.யிலிருந்து?!
லக்னோ: இந்திய நாட்டின் மிகப் பெரிய மாநிலம் உத்ரபிரதேசம்.அந்த மாநிலம்தான் மத்தியில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற கேள்விக்கான விடையை அளிக்கப் போகின்றது.
உத்தரபிரதேசம் என்றாலே அங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி போன்ற பெரும் தலைகள் இங்கு போட்டியிடுகிறார்கள் என்பதுதான் முதலில் நினைவுக்கு வரும்.
அதுமட்டுமல்ல 8 அரசியல் கட்சி தலைவர்களின் தலைவிதியையும் இந்த உத்தரபிரதேச மாநிலம் தான் நிர்ணயிக்க உள்ளது என்பது ஒரு தேர்தல் கால அதிசயம் தான்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 4 ஆவது முறையாக இங்குள்ள ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார். பாஜகவின் தலைவர் ராஜ்நாத் சிங், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொகுதியான லக்னோவில் போட்டியிட்டுள்ளார்.
அதேபோல பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டுள்ளார்.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் மைன்புரி மற்றும் அசம்கார் தொகுதிகளில் போட்டியிட்டிருக்கிறார். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மோடியை எதிர்த்து பெருமைக்குரிய வாரணாசியில் போட்டியிட்டார். முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகரும் பாலியா தொகுதியில் தான் முடிவை எதிர்நோக்கியுள்ளார்.