உத்தரகாண்டில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெல்லும் - இந்தியா டுடே எக்ஸிட் போல்
உத்தரகாண்டில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று இந்தியா டுடே இந்தியா டுடே மை அக்சிஸ் எக்ஸிட் போல் தெரிவித்துள்ளது.
டேராடூன்: உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று இந்தியா டுடே மை அக்சிஸ் எக்ஸிட் போல் முடிவுகள் கணித்துள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி படுபயங்கர தோல்வியைத் தழுவும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 இடங்களுக்கான சட்டசபைத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. மார்ச் 11ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதற்கு முன்னதாக வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்தியா டுடே மை அக்சிஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 45 முதல் 53 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும் என்று கூறியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி 12 முதல் 21 இடங்களில் வெல்லும் என்றும் பிற கட்சிகள் 1 முதல் 4 இடங்களில் வெல்லும் என்றும் அந்த எக்ஸிட் போல் முடிவு தெரிவித்துள்ளது.
சி. வோட்டர் எக்ஸிட் போல்
உத்தகாண்ட்டில் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சி 29 முதல் 35 இடங்களை வெல்லும் என்று சி வோட்டர் கணித்துள்ளது. பாஜக 29 முதல் 35 இடங்களை வெல்லும் என்றும் சி வோட்டர் எக்ஸிட் போல் கணித்துள்ளது. இதே போல பிற கட்சிகள் 2 முதல் 9 இடங்களை பிடிக்கும் என்றும் சி. வோட்டர் எக்ஸிட் போல் கணித்துள்ளது.