டீ, பக்கோடாவுக்கு ரூ. 68 லட்சம்: உத்தரகண்ட் முதல்வர் சொன்னது ஒன்று, செய்தது ஒன்று
Recommended Video
டேராடூன்: உத்தரகண்ட் முதல்வர் கடந்த 10 மாதங்களில் டீ மற்றும் ஸ்நாக்ஸுக்கு ரூ. 68 லட்சம் செலவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. செலவை குறைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறிவிட்டு இப்படி செய்துள்ளார்கள்.
பாஜகவை சேர்ந்த திரிவேந்திர சிங் ராவத் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ம் தேதி உத்தரகண்ட் மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் ஹேமந்த் சிங் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ராவத்தின் டீ, ஸ்நாக்ஸ் செலவு கணக்கை கேட்டிருந்தார்.
அவருக்கு கூடுதல் செயலாளர் வினோத் ரத்தூரி அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் உள்ள தகவல் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பக்கோடா
கடந்த 10 மாதங்களில் டீ மற்றும் ஸ்நாக்ஸுக்கு முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ரூ. 68 லட்சத்து 59 ஆயிரத்து 865 செலவு செய்துள்ளார். ராவத் டீ மற்றும் ஸ்நாக்ஸுக்கு மட்டும் தினமும் ரூ. 22 ஆயிரம் செலவு செய்துள்ளார். அவர் தினமும் 150 முதல் 200 பேரை சந்தித்துள்ளார். ஆனால் இந்த தகவலை ஏற்க முதல்வர் அலுவலகம் மறுத்துள்ளது.
செலவு
டீ மற்றும் ஸ்நாக்ஸுக்கு முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் இதுவரை ரூ. 50 லட்சத்து 38 ஆயிரத்து 880 தான் செலவு செய்துள்ளார் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹரிஷ் ராவத்
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் ஹரிஷ் ராவத் முதல்வராக இருந்தபோது 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2016ம் ஆண்டு ஜூலை மாதம் வரை டீ மற்றும் ஸ்நாக்ஸுக்கு ரூ. 1.5 கோடி செலவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நடவடிக்கை
திரிவேந்திர சிங் ராவத்தின் மீடியா ஒருங்கிணைப்பாளர் தர்ஷன் ராவத் கூறியதாவது, ரூ. 68 லட்சம் எப்படி வந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். பிற முதல்வர்கள் போன்று இல்லாமல் திரிவேந்திர சிங் ராவத் செலவுகளை குறைக்க ஹோட்டல்களில் நிகழ்ச்சிகள் நடத்துவது இல்லை என்றார். செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுத்தும் டீ, பக்கோடாவுக்கு ரூ. 68 லட்சம் செலவு செய்துள்ளனர் என்று நெட்டிசன்ஸ் வறுத்தெடுக்கிறார்கள்.