உத்தரகாண்ட் பெருவெள்ளம் : மீட்புப்பணிகள் நீடிப்பு மலையேற்ற வீரர்கள் 8 பேர் உள்பட 11 உடல்கள் மீட்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழை பெருவெள்ளத்தில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மலையேற்ற வீரர்கள் உள்பட பலரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
உத்தரகாசி: உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை வெள்ளத்தில் சிக்கி மாயமான மலையேற்ற குழுவினர் 8 பேர் உள்பட 11 பேரின் உடல்களை விமானப்படையினர் மீட்டுள்ளனர். இதன்மூலம் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கன மழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 64 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமான பலரை தேடும் பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளன.
உத்தரகாண்டின் உத்தரகாசியில் உள்ள ஹர்சில்லில் இருந்து இமாசல பிரதேசத்தின் சிட்குல் வரை மலை ஏற்றம் செய்வதற்காக, எட்டு பேர் அடங்கிய மலை ஏற்ற வீரர்கள், 3 சமையல்காரர்களுடன் சமீபத்தில் புறப்பட்டனர்.
இவர்கள் 11 பேரும் கடந்த 18ந்தேதி திடீரென மாயமாயினர். அவர்களை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.
விமானம் மூலம் தேடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 4,500 அடி உயரத்தில் இருவர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணியின் போது மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து மலையேற்ற வீர்ர்கள் 8 பேரும், உடன் சென்ற மூவர் என 11 பேரும் பலியாகி உள்ளனர் என தெரிய வந்துள்ளது. 11 பேர் உடல்களும் மீட்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே உத்தரகாண்டில் இடைவிடாது பெய்த மழையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சார் தாம் யாத்திரை, மழை நின்ற பிறகு கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரியில் மீண்டும் தொடங்கியது. இருப்பினும், பத்ரிநாத்தில் சாலைப்பாதைகள் இன்னும் தடைசெய்யப்பட்டுள்ளன. வானிலை தெளிவான பிறகு மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷில் இருந்து பொது மற்றும் தனியார் வாகனங்களில் சார் தாம் யாத்திரைக்கு புறப்படுகிறார்கள்.
கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சேவை சீராகிவிட்டது, விரைவில் ஜோஷிமத் மற்றும் பிபல்கோடியில் மீண்டும் தொடங்கும் என உத்தரகண்ட் சார் தாம் தேவஸ்தான மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.
ஜோஷிமத் மாவட்ட நீதிபதி, ஹிமான்ஷு குரானா மற்றும் உதவி ஆட்சியர் கும்கும் ஜோஷி ஆகியோர் புதன்கிழமை பத்ரிநாத்தில் சாலை மறியலை ஆய்வு செய்தனர். இடைவிடாத மழை காரணமாக அல்மோரா நெடுஞ்சாலையின் பெரும் பகுதியும் முற்றிலும் சேதமடைந்துள்ளது. ஹல்ட்வானி முதல் அல்மோரா வரையிலும், அல்மோராவிலிருந்து ராணிகேட் மற்றும் பாகேஸ்வர் வரையிலும் பல சாலைகள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பேய்மழை.. திணறும் உத்தரகாண்ட்.. பனிச்சிகரத்தில் 5 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு.. ஒருவர் மாயம்
இதற்கிடையில், தேவஸ்தான மேலாண்மை வாரியத்தின் உறுப்பினர் டாக்டர் ஹரீஷ் கவுர், உத்தரகண்ட் சார் தாம் கோவில்களில் தினமும் வழிபாடுகள் நடந்து வருவதாக கூறினார். கோவில்களின் வாயில்கள் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை சுமார் இரண்டு லட்சம் யாத்ரீகர்கள் சார் தாம் வந்துள்ளனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹெலிகாப்டர் மூலம் நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, ஆளுநர் குர்மித் சிங் ஆகியோரும் உடன் சென்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்தும், மீட்பு பணிகள் குறித்தும் அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,10க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும், இரு மலையேறும் குழுக்கள் காணாமல் போன நிலையில், ஒரு குழு கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார்.
மத்திய மற்றும் மாநில அரசின் நிறுவனங்கள் சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுத்து பணிகளை மேற்கொண்டதால் சேதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நைனிடால், அல்மோரா, ஹல்த்வானி பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், மின் உற்பத்தி நிலையங்களில் விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
உத்தராகண்ட் மழை வெள்ளத்தில் எந்த சுற்றுலாப் பயணியும் உயிரிழக்கவில்லை என்றும், மழை வெள்ளத்தில் சிக்கிய 3,500 பேர் மீட்கப்பட்டதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். உத்தரகாண்டின் பல இடங்களில் சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களை விரைவில் வெளியேற்றுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட பேரழிவால் மாநிலத்தில் இதுவரை 65 பேர் இறந்துள்ளனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.