உத்தரகாண்ட் பெரு வெள்ளம்: மாயமான 136 பேரை இறந்தவர்கள் என அறிவிக்க உத்தரகாண்ட் அரசு முடிவு!
டேராடூன்: உத்தரகாண்ட் கோர வெள்ளத்தில் சிக்கி 136 பேர் மாயமாகி உள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் உயிரிழந்தவர்கள் என அறிவிக்க உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது.
வெள்ளத்தில் இருந்து இதுவரை 70 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 29 மனித உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படை, தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இரவு, பகலாக தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உத்தரகாண்ட் கோர வெள்ளம்
உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் ஜோஷிமாத் பகுதியில் பனிப்பாறை உடைந்து உருகியதால் தவுளிகங்கா ஆற்றில் 2 வாரங்களுக்கு முன்பு பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலங்கள், அணை, நீர்மின் திட்ட கட்டமைப்புகள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டன.
உடல்கள் மீட்பு
நீர்மின் திட்ட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் நீரில் மூக்கி உயிரிழந்தனர்.அங்கு இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படை, தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இரவு, பகலாக தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தபோவன் சுரங்கத்தில் இருந்தும் ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டன.
இறந்தவர்கள் என அறிவிக்க முடிவு
இந்த வெள்ளத்தில் இதுவரை 70 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 29 மனித உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த நிலையில் 136 பேர் மாயமாகி உள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் உயிரிழந்தவர்கள் என அறிவிக்க உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது.
அதிகாரிகள் சொல்வது என்ன?
விபத்து நடந்து 2 வாரங்களுக்கு மேலாவதால் அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. எனவே உத்தரகாண்ட் அரசு இந்த முடிவை எடுக்க உள்ளதாகவும், ஒரு பேரழிவில் சிக்கி மாயமானவர்கள் குறித்து 7 ஆண்டுகள் எந்த தகவலும் இல்லை என்றால் அவர்கள் இறந்தவர்கள் என்று அறிவிக்கப்படுவார்கள் என்று அந்த மாநில அரசு அதிகாரிகள் சிலர் கூறினார்கள்.