உத்தரகண்ட்டில் அடித்து நொறுக்கும் கனமழை.. வெள்ள பாதிப்பில் 3 நாட்களில் 34 பேர் பலி.. பிரதமர் இரங்கல்
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் குறைந்தபட்சம் 34 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் வேறு சில பகுதிகளிலும் இதேபோல கனமழை பெய்து வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியை நாளை நேரில் ஆய்வு செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. பருவமழை தீவிரம் எதிரொலி
|
உத்தரகண்ட் வெள்ளம்
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பல பகுதிகளில் மேக வெடிப்பு காரணமாக அதி தீவிர கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கார்கள், இரு சக்கர வாகனங்கள் என அனைத்தும் வெள்ளத்தின் பலத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அடித்துச் செல்லப்படும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதுமட்டுமின்றி பாலங்கள், கடைகள், ஹோட்டல்கள் ஆகியவற்றை வெள்ள நீர் சூழ்ந்துள்ள காட்சிகளும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
|
34 பேர் உயிரிழப்பு
கடந்த 2 நாட்களில் மட்டும் வெள்ள பாதிப்பில் சிக்கி குறைந்தபட்சம் 34 பேர் வரை உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. வெள்ள பாதிப்புகளை உத்தரகண்ட் முதல்வர் மற்றும் அம்மாநில கல்வித் துறை அமைச்சர் விமானம் மூலம் ஆய்வு செய்தனர். மேலும், இந்த வெள்ளத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்குத் தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
|
Array
உத்தரகண்ட் வெள்ளம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள் துறை அமைச்சருக்கு விளக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ள பாதிப்புகளைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் டாமிக்கு ஆலோசனை கொடுத்தார். மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வீடுகள், பாலங்கள் போன்றவை சேதமடைந்துள்ளன. மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மூன்று ராணுவம் ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட உள்ளன என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் டாமி தெரிவித்தார்.
|
எப்போது மழை குறையும்
குறிப்பாகத் தொடர்ச்சியான நிலச்சரிவு காரணமாகப் பிரபலமான சுற்றுலாத் தலமான நைனிடால் உத்திரகண்டின் மற்ற பகுதிகளிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்குச் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகள், அலுவலக கட்டிடங்கள் என அனைத்திலும் வெள்ள நீர் புகுந்துள்ளது. அதேநேரம் இன்று முதல் உத்தரகண்ட்டில் பெய்யும் மழையின் அளவு குறையும் என்பதால் நிலைமை மேம்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இமயமலை கோயில்கள்
இருப்பினும், வானிலை முழுமையாக சீரடையும் வரை இமயமலையில் உள்ள கோயில்களுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் கேதார்நாத்தில் கனமழை பெய்து வருகிறது ஆனால் அங்குள்ள மந்தாகினி நதியில் இயல்பான அளவிலேயே நீர் ஓடுகிறது. நான்கு இமயமலை கோவில்களிலும் வழக்கமான பிரார்த்தனைகள் தொடர்கின்றன என்றும், அங்குத் தங்கியிருக்கும் பக்தர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் தேவஸ்தான வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.
வைரல் வீடியோ
உத்தரகண்ட் வெள்ளம் தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இன்று காலை மால் சாலை மற்றும் நைனா தேவி கோவில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன காட்சிகள் இணையத்தில் வைரலானது. மேலும், சால்தி ஆற்றின் மீது குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலம் வெள்ள நீரின் வேகத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் அடித்துச் செல்லும் வீடியோக்களும் வைரலாகியுள்ளது.
|
பிரதமர் மோடி ட்வீட்
இந்நிலையில், வெள்ளத்தால் உயிரிழந்தோருக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் கண்டு வருத்தமாக உள்ளது. இதில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைவரின் பாதுகாப்பிற்கும் நான் பிரார்த்திக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.