இந்தியர்களை மீட்க வி.கே.சிங் தலைமையில் மீட்புக் குழு.. தெற்கு சூடான் விரைந்தது - சுஷ்மா சுவராஜ்
டெல்லி: இந்தியர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு வர முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங் தலைமையில் மீட்புக் குழு தெற்கு சூடான் நாட்டிற்கு சென்றிருப்பதாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
சூடானில் இருந்து பிரிந்த தெற்கு சூடானில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அந்நாட்டின் அதிபர் சல்வா கீர் மற்றும் துணை அதிபர் ரியக் மாசர் ஆகிய இருவருக்கும் இடையே அதிகாரப்போட்டி நிலவி வருகிறது.
இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே கடுமையான மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில், தெற்கு சூடானில் உள்நாட்டுப் போரால் சுமார் 600 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய வெளியுறவுத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக நேற்று உயரதிகாரிகளுடன் சுஷ்மா சுவராஜ் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், போர் நடைபெறும் தெற்கு சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க "சங்கத் மோச்சான்" என்று பெயரிடப்பட்டுள்ள திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், முன்னாள் ராணுவத் தளபதி வி.கே. சிங் தலைமையில், மீட்புக் குழு அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தெற்கு சூடானில் உள்ள இந்தியர்களை தாயகத்திற்கு கொண்டு வருவதற்காக, C-17 ரக சிறப்பு விமானங்கள் இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டது. இந்நிலையில் சூபா நகருக்கு அந்த விமானம் சென்றடைந்தது. சூடானில் தவித்து வரும் குழந்தைகள், பெண்கள், ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் 5 கிலோ வரை பொருட்கள் கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களை பத்திரமாக மீட்டு வருவதே எங்களின் இலக்கு என மத்திய வெளியுறத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார். மேலும் அங்குள்ள இந்தியர்கள் விரைவில் இந்தியா திரும்ப வேண்டும் என்று சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தி உள்ளார்.