சிபிஎம் மாநில குழுவில் இருந்து அச்சுதானந்தன் திடீர் நீக்கம்: கேரளாவில் பரபரப்பு
திருவனந்தபுரம்: கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுக் குழுவில் இருந்து எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாடு கடந்த 20ம் தேதி ஆலப்புழையில் நடந்தது. இதில் கேரள எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தனுக்கும், மாநில தலைவர் பினராய் விஜயனுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து அச்சுதானந்தனை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் மாநாட்டிலிருந்து வெளியேறினார்.
இதற்கிடையே அவர் எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினமா செய்ய போவதாகவும், இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிவிக்க போவதாகவும் கூறப்பட்டது. இதனால் காலை முதலே திருவனந்தபுரத்தில் உள்ள அச்சுதானந்தன் வீட்டின் முன பத்திரிக்கையார்களும், தொண்டர்களும் குவிந்தனர்.
ஆனால் அவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் ஒரு அறிக்கை மட்டும் வெளியிட்டார். அதில், கட்சி தன்னை துரோகி என அறிவித்த மாநாட்டில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து அச்சுதானந்தன் மாநில கமிட்டியிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி மேலிடம் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போராட்டம் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.