போஸ்டர் ஒட்ட ஒரு இடம் கூட இல்லாமல் பிடித்து வைத்தால் எப்படி.. வதோதராவில் குமுறும் காங்.
வதோதரா: குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மதுசூதன் மிஸ்த்ரி போட்டியிடுகிறார்.
அங்கு, ஆளுங்கட்சியாக பாஜக இருப்பதால் வதோதரா நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர கம்பங்களிலும் விளம்பரம் செய்ய முன்பதிவு செய்துவிட்டது.
இந்த முன்பதிவால், காங்கிரஸ் வேட்பாளர் விளம்பரம் செய்ய போதிய இடம் கிடைக்கவில்லை. இதனால் இருவருக்குமிடையே "போஸ்டர் யுத்தம்" ஆரம்பமானது.
சில தினங்களுக்கு முன்பாக மிஸ்த்ரி தனது தொகுதி பிரச்சாரத்தின்போது மோடியின் போஸ்டர்களை அகற்றிவிட்டு, அதில் தனது போஸ்டர்களை ஒட்ட முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட விளம்பரங்களில் ராகுல் காந்தியுடன் வேட்பாளரின் படமும் இருப்பதால் அதை வேட்பாளரின் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்தியுள்ளது.
இதையடுத்து அந்த போஸ்டர்களில் உள்ள வேட்பாளரின் முகம் நேற்று அவசரம் அவசரமாக மறைக்கப்பட்டது. மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் புதிய விளம்பரங்களை வைக்க திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.