டெல்லி வாகனக் கட்டுப்பாட்டில் விஐபிகளுக்கு விதி விலக்கா? டெல்லி அரசுக்கு ராபர்ட் வதேரா கேள்வி
டெல்லி: வருகிற ஜனவரி மாதம் முதல் தலைநகர் டெல்லியில் வரவிருக்கும் புதிய வாகன கட்டுப்பாடுகளில் விஐபிகளுக்கு மட்டும் விலக்கு அளிப்பது சரியா? என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் ஒற்றைப்படை எண்களுடன் முடியும் வாகனங்கள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களிலும் இரட்டைப்படை எண்களுடன் முடியும் வாகனங்கள் செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்று டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட இருக்கும் ஜனவரி 1 முதல் 15-ந் தேதி வரையில் டெல்லி மாநிலத்துக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விதியில் இருந்து விஐபிக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு சோனியாவின் மருமகனும் பிரபல தொழிலதிபருமான ராபர்ட் வதேரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது:
ஒற்றை வரிசை, இரட்டை வரிசை முறைகள் அறிமுகமாகியுள்ளன. இதில் சிலருக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பது முற்றிலும் தவறான செயலாகும். மக்கள் நலனுக்காக ஒரு சட்டம் அமல்படுத்தப்பட்டால் அது நம் எல்லோருக்கும் பொருந்தும். விஐபி என்பதெல்லாம் கிடையாது என்று வத்ராவின் பதிவில் கூறப்பட்டுள்ளது.