காவிரி: மத்திய அரசு மீண்டும் பெரிய துரோகம் செய்துவிட்டது.. வைகோ கடும் கண்டனம்
காவிரி மேலாண்மை செயல்திட்டம் குறித்து தற்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டெல்லி: காவிரி மேலாண்மை செயல்திட்டம் குறித்து தற்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்திய அரசு மீண்டும் பெரிய துரோகம் செய்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை செயலர் யுபி சிங் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். காவிரி வழக்கில் வரைவு திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி, வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து காவிரி வரைவு திட்ட அறிக்கை நகல்கள் 4 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி தொடர்பான வழக்கை மே 16ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
காவிரி மேலாண்மை செயல்திட்டம் குறித்து தற்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்திய அரசின் செயல் திட்டத்திற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிகாரமற்ற மேற்பார்வைக்குழு அமைக்க மத்திய அரசு செயல்திட்டம் தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசு இந்த முறையும் தமிழகத்திற்கு பெரிய அநீதியை நிகழ்த்தியுள்ளது. காவிரியில் உள்ள அணைகள் எல்லாம் எப்போதும் போல மாநிலக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது கண்டனத்துக்குரியது.
இது முழுக்க முழுக்க நடுவர்மன்ற உத்தரவை திசை திருப்பும் யுக்தி.உச்சநீதிமன்றம் பிப். 16ம் தேதி வழங்கிய தீர்ப்பை 7 நீதிபதிகளுக்கு மேலாக அரசியல் சாசன அமர்வின் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதற்காக உடனடியாக தமிழக அரசு மனு செய்ய வேண்டும், என்று கோரிக்கை வைத்துள்ளார்.