மோடியை திணறடிக்க வைகோ டெல்லியில் முகாம்... :கெஜ்ரிவால், மன்மோகன்சிங், லாலு உடன் சந்திப்பு
டெல்லி: எளிமை, தன்னடக்கம் உள்ளிட்ட பண்புகள்தான் அரவிந்த் கெஜ்ரிவாலை பொது வாழ்வில் வெற்றி பெறச் செய்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புகழாரம் சூட்டினார்.
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் திருத்த மசோதாவிற்கு எதிராக டெல்லியில் அன்னாஹசாரே நடத்திய போராட்டத்தில் அர்விந்த் கெஜ்ரிவாலுடன் வைகோ பங்கேற்றார்.
இதனையடுத்து அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை வைகோ அவரைச் சந்தித்துப் பேசினார்
இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக கெஜ்ரிவாலுக்கு தொலைபேசியின் வாயிலாக அப்போதே என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். டெல்லி வரும்போது சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார். அவரது அழைப்பை ஏற்று, இப்போது அவரைச் சந்தித்தேன்.
வாழ்த்து கூறிய வைகோ
கெஜ்ரிவால் வெற்றிக்கு நேரில் சந்தித்து என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். எளிமை, தன்னடக்கம் ஆகியவைதான் பொது வாழ்வில் அவரை வெற்றிபெறச் செய்துள்ளது என்பதைத் தெரிவித்தேன்.
அரசியல் நோக்கமல்ல
இச்சந்திப்பின்போது இலங்கையில் நிகழ்ந்த இனப் படுகொலை தொடர்பான குறுந்தகடுகளை வழங்கினேன். அவற்றை அவரது மனைவியுடன் அமர்ந்து பார்க்குமாறு வலியுறுத்தினேன். இச்சந்திப்பு முழுக்க முழுக்க தனிப்பட்ட சந்திப்புதான். இதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை.
கூட்டணியில்லை
இந்த சந்திப்பின் மூலம் தமிழகத்தில் ஆம்ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேட்கின்றனர். அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் இல்லை.
நேதாஜி பயிரங்கம்
மேலும், வரும் மார்ச் 23-ஆம் "நேதாஜியின் வெற்றிப் பயணம்' குறித்து டெல்லியில் பயிலரங்கம் நடத்தத் திட்டமிட்டுள்ளேன். இதில் அரசியல் கலப்பு இல்லாத முக்கியத் தலைவர்களை அழைக்க திட்டமிட்டுள்ளேன் என்றார் வைகோ.
போராட்டத்தில் பங்கேற்பு
விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்துதல் சட்டம் தொடர்பாக மேதா பட்கர் தலைமையில் டெல்லி நாடாளுமன்றச் சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை வைகோ பங்கேற்றார்.
மன்மோகன்சிங்
இதனைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார்.
முக்கிய அரசியல் தலைவர்கள்
முக்கிய அரசியல் தலைவர்களான லல்லு பிரசாத் யாதவ், சரத் யாதவ், பிஸ்வால் உள்ளிட்டவர்களையும் சந்தித்துப் பேசினார்.
மோடிக்கு எதிராக
நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எதிராக நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ள வைகோ பாஜகவிற்கு எதிரான தலைவர்களை ஓரணியில் திரட்டி வருகிறார் வைகோ.