வைகோ – பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு.. திருவனந்தபுரத்தில்!
திருவனந்தபுரம்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த வைகோ தேர்தலுக்குப் பின்னர் மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சனம் செய்தார்.
இதனையடுத்து பாஜகவினர் வைகோவை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நேற்று வைகோ சென்றிருந்தார். அங்கு வந்திருந்த பொன்.ராதாகிருஷ்ணனிடம் பத்து நிமிடங்கள் பேசினார்.தமிழுக்காக குரல் கொடுத்து வரும் உத்தரபிரதேச மாநில பாஜக எம்.பி தருண் விஜய்க்கும் வைகோ நன்றி தெரிவித்தார்.
நட்பு ரீதியாக பேசியதாகவும், அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று வைகோ தெரிவித்துள்ளார்.