பொக்ரான் நாயகன்.. அமெரிக்கா கண்ணிலேயே மண்ணை தூவி அணு குண்டு சோதனை நடத்திய வாஜ்பாய்!
Recommended Video
டெல்லி: உலகின் அசைக்க முடியாத சூப்பர் பவர் நாடாக உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்திருந்த அமெரிக்காவுக்கு தெரியாமல் பொக்ரானில் அணு குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர் தான் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்.
1998 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு தீர்மானிக்கப்பட்டது.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பொது இயக்குனராக அப்போது பதவிவகித்த விஞ்ஞானி அப்துல் கலாம் மற்றும் பிரதமர் வாஜ்பாய் ஆகிய இருவரும் ஒரு நீண்ட ரகசிய ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்தியாவின் அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத வல்லமையில் அச்சுறுத்திக் கொண்டிருந்த நிலையில், இந்தியா மட்டும் கைகட்டி வாய் பொத்தி பார்க்க வேண்டுமா என்ற கேள்வியை அப்போது அந்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கேட்டுக் கொண்டனர்.
நடத்துங்கள்
அணுகுண்டு சோதனையை நடத்த நமது விஞ்ஞானி குழுவிடம் திறமை உள்ளது. தயார் என்றால் நாங்கள் செய்து முடிக்கிறோம், என்றார் அப்துல் கலாம். உடனே பச்சைக்கொடி காட்டினார் வாஜ்பாய். அணு ஆயுதம், தனது பிறப்புரிமை என்ற எண்ணத்தில் இருந்த அமெரிக்கா மற்றும் அமைதி விரும்புவதாக கூறும் ஐரோப்பிய நாடுகள் பலவும் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க கூடும். பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறல் செய்ய கூடும் என்பது போன்ற பல்வேறு சிக்கல்கள் இருப்பினும் துணிச்சலாக இந்த முடிவை எடுத்தார் வாஜ்பாய்.
சிரித்த புத்தர்
1974 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்தியா முதல் முறையாக அணுகுண்டு சோதனையை நடத்தியது. அப்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். புத்த பூர்ணிமா அன்று நடத்தப்பட்ட இந்த சோதனை, 'சிரிக்கும் புத்தர்' என்றும் அழைக்கப்பட்டது. இதன்பிறகு அமெரிக்க நெருக்கடியை சந்தித்து வந்த இந்தியா, வாஜ்பாய் மற்றும் அப்துல் கலாம் கூட்டுமுயற்சியால் 1998-ம் ஆண்டு மே 11-ம் தேதி அதே பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியது. ஆம், புத்தர் மீண்டும் சிரித்தார். ஆபரேஷன் சக்தி என்ற பெயரில் மூன்று முறை குலுங்கியது பூமி.
கோட்டை விட்ட அமெரிக்கா
45 கிலோ டன் ஹைட்ரஜன் குண்டை இந்தியா பரிசோதனை செய்தபோது, பாலைவன பகுதிகள் குலுங்கின. பல நாடுகளும் நில நடுக்கம் என்றுதான் ரிக்டர் அளவுகோலை பார்த்து நினைத்துக்கொண்டன. ஆனால் வல்லரசான அமெரிக்காவின், உளவு செயற்கைக் கோள் கழுகுப்பார்வையில் இருந்து இந்த சோதனயை மிக நேர்த்தியாக தப்புவிக்க செய்ததுதான், இந்திய விஞ்ஞானிகள் குழுவின் மற்றொரு பெரும் சாதனை. இந்தியா மீது போடப்பட்ட 30 ஆண்டு கால அணு ஆராய்ச்சித் தடைகளையும் அந்த குண்டு முழுவதுமாய் சிதறடித்தது. பிரதமர் வாஜ்பாய் அளித்த பிரஸ் மீட்டுக்கு பிறகுதான், உலக நாடுகளுக்கு இந்தியா அணு குண்டு சோதனை நடத்தியது தெரிந்தது.
சிஐஏ ஆதிக்கம்
அமெரிக்கா தனது மறைமுக வல்லாதிக்கத்தை இந்தியா மீது செலுத்திக்கொண்டிருந்த கால கட்டம் அது. அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இந்திய பாதுகாப்பு அமைப்பின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வந்தது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தொலைபேசிகள் கூட ஒட்டுக் கேட்டதாக ஒரு தகவல் உண்டு.
கும்பகர்ணா, தாஜ்மகால் போகலாமா
அமெரிக்க உளவாளிகளிடமிருந்து தப்பிக்க, இந்திய விஞ்ஞானிகள் தங்கள் தொலைபேசி உரையாடலில் கூட பல்வேறு கோட் வேர்ட்டுகளை பயன்படுத்தினர். 'தாஜ்மஹால்', 'கும்பகர்ணன்' 'சியரா' போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி கருத்துக்களை பரிமாற்றம் செய்தனர். அமெரிக்க செயற்கைகோள் கண்காணிப்பில் இருந்து தப்புவதற்காக, அப்துல் கலாம் உள்ளிட்ட விஞ்ஞானிகள்கூட ராணுவத்தினர் அணியும் சீருடை அணிந்துதான் போக்ரான் சென்று வந்தனர். பெரும்பாலான பணிகள் இரவில்தான் மேற்கொள்ளப்பட்டன.
ரகசியம் காத்த குழு
அணுகுண்டை சுமந்துகொண்டு பெங்களூரிலிருந்துதான் தொலைதூரத்தில் உள்ள ராஜஸ்தானுக்கு லாரி சென்றது. இந்திய உளவு அதிகாரி ஒருவர் லாரி ஓட்டிச் சென்றார். இவ்வாறு ஆபரேஷன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன. பிரதமர் வாஜ்பாய், அப்துல் கலாம், அரசில் முக்கிய அங்கம் வகித்த அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஜஸ்வந்த் சிங், அணுசக்தி ஆணையராக இருந்த ராஜகோபால சிதம்பரம் உள்ளிட்ட மிக சொற்பமானவர்களுக்கு மட்டுமே அணுகுண்டு சோதனை நடத்தப் போவது முன்கூட்டியே தெரிந்திருந்தது.
வல்லரசு இந்தியா
ஸ்டாக்கோம் சர்வதேச அமைதி ஆய்வு இன்ஸ்ட்டியூட் அறிவிப்புபடி, உலகிலேயே 9 நாடுகளிடம்தான் அணு ஆயுதங்கள் உள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், வட கொரியா, இஸ்ரேல் மற்றும் இந்தியா. பாதுகாப்பு துறையில் வல்லரசு நாடாக இந்தியாவை மாற்ற உதவியது வாஜ்பாய் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அணு ஆயுத சோதனைதான். இன்றுவரை தெற்காசிய பிராந்தியத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக, இந்தியா விஸ்வரூபம் எடுக்க காரணமாக இருந்ததும், போக்ரானில் மீண்டும் சிரித்த புத்தர்தான்.