பாஜகவில் வாஜ்பாய்- அத்வானி சகாப்தம் முடிவுக்கு வந்தது!
டெல்லி: பாரதிய ஜனதாவின் நாடாளுமன்றக் குழு அல்லது ஆட்சிமன்றக் குழுவில் இருந்து வாஜ்பாய், அத்வானி ஆகியோர் விடுவிக்கப்பட்டு இருப்பதன் மூலம் அக்கட்சியில் இருவரது சகாப்தம் என்பது முடிவுக்கு வந்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சியில் உயர்ந்த அதிகார அமைப்பு பார்லிமெண்ட்ரி போர்டு எனப்படுகிற நாடாளுமன்றக் குழு அல்லது ஆட்சிமன்றக் குழுதான். இந்தக் குழுவை புதிய தலைவர் அமித்ஷா மாற்றி அமைத்திருக்கிறார்.
விடுவிப்பு
இக்குழுவில் இருந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எல்.கே.அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாஜகவின் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட குழுவில் இனி வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு இடம் எதுவும் இல்லை.
மோடிக்கு போட்டியாளர்கள்
வாஜ்பாயைப் பொறுத்தவரையில் அவர் ஏற்கெனவே தீவிர அரசியலைவிட்டு ஒதுங்கிவிட்டார். அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும் மோடிக்கு இணையான பொறுப்புகளுக்கு போட்டியாக கருதப்பட்டனர்.
கோவா பஞ்சாயத்து
கடந்த ஆண்டு கோவாவில் பாரதிய ஜனதாவின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜகவின் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரக் குழுத் தலைவராக நரேந்திர மோடி மோடி தேர்வு செய்யப்பட்டார். இதை உணர்ந்து கோவா கூட்டத்தை அத்வானி புறக்கணித்திருந்தார்.
அத்வானி வீடு முற்றுகை
அத்வானியின் இந்த செயலைக் கண்டித்து அப்போதே மோடி ஆதரவாளர்கள் டெல்லியில் உள்ள அத்வானி வீடு முன்பு போராட்டம் நடத்தியிருந்தனர். ஆனாலும் அசராத அத்வானியோ, கட்சிப் பதவிகள் அனைத்தையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். கேட்டுக் கொண்டதற்கினங்க அத்வானி ராஜினாமாவை வாபஸ் பெற்றார்.
பிரதமர் வேட்பாளராக மோடி
இதன் பின்னர் அத்வானியின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். ஆனால் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தையும் அத்வானி புறக்கணித்தார். பின்னர் மோடியே நேரில் சென்று அத்வானியை சந்தித்து சமரசம் ஆனார்.
தொகுதி பிரச்சனை
லோக்சபா தேர்தலின் போதும் மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதியில் போட்டியிட அத்வானி விரும்பினார். ஆனால் மோடி உள்ளிட்டோர் அவர் குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில்தான் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதிலும் அத்வானிக்கு அதிருப்தி இருந்தது. பின்னர் சமாதானமானார்.
தேர்தல் முடிவடைந்த பின்னர்..
லோக்சபா தேர்தல் முடிவடைந்து பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷி ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் என்ன இடம் என்ற கேள்வி எழுந்தது.
ஓரம்கட்டப்பட்ட அத்வானி, ஜோஷி
அத்வானி துணைப் பிரதமராக இருந்ததால் அதற்கு கீழான மத்திய அமைச்சர் பதவியில் அமர்த்த விரும்பவில்லை என்று பாஜக விளக்கம் அளித்தது. முரளி மனோகர் ஜோஷிக்கும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அவர் ஆளுநராக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் அவர் ஓரங்கட்டப்பட்டார்.
ஒட்டுமொத்தமாக விடுவிப்பு
இப்படி படிப்படியாக அத்வானி, முரளிமனோகர் ஜோஷி ஆகியோர் ஒதுக்கப்பட்டு தற்போது பாஜகவின் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட உயர்நிலைக் குழுவில் இருந்தே விடுவிக்கப்பட்டும் இருக்கின்றனர். இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சியை உருவாக்கியவர்களில் வாஜ்பாயும் அத்வானியும் முதன்மையானவர்கள். 1980ஆம் ஆண்டு பாஜக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து அக்கட்சியின் முகங்களாக அறியப்பட்ட வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோரின் சகாப்தம் என்பது முடிவுக்கு வந்துள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
மோடி- அமித்ஷா சகாப்தம்
இனி பாரதிய ஜனதாவின் முகங்களாக பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் அவரது ஆதரவாளர்களே அடையாளம் காணப்படும் நிலைமையும் உருவாகி இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.