கார்கில் போரில் வென்ற வெற்றி நாயகன் வாஜ்பாய்!
டெல்லி: வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கார்கிலில் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கை அதிரடியான போராக மாறிப் போயிருந்தது.
கடந்த 1999-ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் ராணுவமும் காஷ்மீர் போராளிகளும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவினர்.
பாகிஸ்தான் படையினரின் உதவியுடன் சுமார் 5000 பேர் ஊடுருவினர். இதனால் இந்தியப் படையினர் அதிர்ச்சி அடைந்தனர். தடுப்பு நடவடிக்கைகளில் மட்டுமே அப்போது அவர்களால் ஈடுபட முடிந்தது.
கட்டுப்பாட்டுக்குள்
வாஜ்பாய் அவசர ஆலோசனையில் குதித்தார். பாகிஸ்தான் படையினர் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் தொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் படையினரையும், தீவிரவாதிகளையும் விரட்டியடிக்க ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டது.
ஆபரேஷன் விஜய்
இதையடுத்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததோடு இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை அப்புறப்படுத்த ஆபரேஷன் விஜய் என்ற நடவடிக்கையில் இந்திய ராணுவம் இறங்கியது.
அதிரடி தாக்குதல்
இந்திய வீரர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு படு ஆவேசமாக தாக்குதல் தொடுத்ததால் அதிர்ந்து போனது பாகிஸ்தான் தரப்பு. இந்தியாவின் பக்கம் இழப்புகள் அதிகம் இருந்தாலும் கூட பாகிஸ்தானுக்கு இழப்பு அதை விட அதிகமாக இருந்தது
வாஜ்பாய் படையினருக்கு உத்தரவு
நாடு முழுவதும் கார்கில் போருக்கு ஆதரவு பெருகியது. வாஜ்பாய்க்கு நாட்டு மக்கள் உறுதுணையாக நின்றனர். அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு மத்திய அரசுக்கு ஆதரவாக நின்றன.
கார்கில் வெற்றி தினம்
ஆபரேஷன் விஜய் 60 நாட்களுக்கு நீடித்தது. ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் ராணுவ வீரர்களையும் பயங்கரவாதிகளையும் இந்திய ராணுவம் விரட்டி அடித்து ஜூலை 26-ஆம் தேதி இந்திய கொடியை பறக்கவிட்டது. அந்த தினம் ஆண்டுதோறும் கார்கில் வெற்றி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் படைகள்
அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனுக்கு வாஜ்பாய் ரகசிய கடிதம் ஒன்றை எழுதியதாகவும் கூறப்படுகிறது. அதில் பாகிஸ்தான் படையினர் இந்திய எல்லையில் விட்டு செல்ல மறுக்கின்றனர் என்றும் அவர்களை எல்லைத் தாண்டாமலும் ஆயுதங்களையும் பயன்படுத்தாமலும் விரட்டியடிப்போம் என்றும் வாஜ்பாய் கூறியிருந்தார். இதையடுத்து பில் கிளிண்டன் நவாஸ் ஷெரீப்பை தொடர்பு கொண்டு கார்கிலில் இருந்து பாகிஸ்தான் படைகளை திரும்ப பெறுமாறு வலியுறுத்தினார்.
நாயகன்
இது முழுக்க முழுக்க வாஜ்பாயின் துணிச்சலும் திறம்பட செயல்பட்ட விதமும் தான் காரணம் என்று அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்தியா பாகிஸ்தான் இடையிலான முக்கியப் போர் இது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்களை துணிச்சலான ராணுவ நடவடிக்கை மூலம் விரட்டியடுத்து கார்கில் நாயகனாக உருவெடுத்தார் வாஜ்பாய்.