வழக்கத்திற்கு மாறாக, வந்தே மாதரம் இசைத்து தொடங்கியது கர்நாடக சட்டசபை! காரணம் என்ன?
பெங்களூர்: காவிரி நதியிலிருந்து கூடுதல் நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 20ம் தேதி தீர்ப்பளித்தது.
இதனால் கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற கர்நாடக இரு அவைகளின் கூட்டு கூட்டத்தை இன்று கூட்டியது கர்நாடக அரசு.
காலை 11 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கும் என்று சட்டசபை செயலாளர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் சட்டசபை கூட்டம் தொடங்குவது தாமதமாகிக்கொண்டு சென்றது. மதியம் 1 மணிக்குதான் பேரவை, மேலவை கூடின.
வழக்கத்திற்கு மாறாக, கூட்டம் தொடங்கியபோது, தேசிய பாடலான 'வந்தே மாதரம்' இசைக்கப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியபிறகே பேரவை கூட்டம் தொடங்கியது.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஒரு தீர்மானத்தை சட்டசபை நிறைவேற்ற திட்டமிட்டதாக கூறப்பட்ட நிலையில், வந்தே மாதரம் பாடல் மூலம் சட்டசபையை தொடங்கியுள்ளனர். தேசிய ஒருமைப்பாட்டில் தங்களுக்கு நம்பிக்கையுள்ளது என்பதை தேசத்திற்கு பதிவு செய்ய இந்த பாடல் இசைக்கப்பட்டது என தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.