மோடியை சந்திக்கவிடாமல் தடுத்ததால் ஆத்திரம்.. பேருந்துக்கு தீவைத்த வாரணாசி பெண் கைது
வாரணாசி: மோடியை சந்திக்கவிடாமல் தடுத்ததால் ஆத்திரமடைந்த பெண் பேருந்துக்கு தீவைத்ததை அடுத்து கைது செய்யப்பட்டார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த 17-ஆம் தேதி பிறந்த நாள் என்பதால் தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்றிருந்தார். அடுத்த நாள் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை செய்தார்.
இந்த பயணத்தின் போது வாரணாசியை சேர்ந்த வந்தனா ரகுவன்ஷி என்பவர் பிரதமரையும் முதல்வர் யோகியையும் சந்திக்க முயற்சித்துள்ளார். அவர் அவர்களை சந்திக்க விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பயணிகளை இறக்கிவிட்டார்
பிரதமர் மோடியை சந்திக்க முடியாததால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் நேற்று கண்டோன்மென்ட் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த உத்தரப்பிரதேச மாநில அரசு பேருந்து ஒன்றுக்கு தீ வைக்க திட்டமிட்டார். அதன்படி பேருந்து அருகே சென்ற அவர் அதில் இருந்த ஓரிரு பயணிகளை இறங்குமாறு கூறிவிட்டார்.
வந்தனா கைது
பின்னர் பெட்ரோலை பேருந்தின் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் அந்த பேருந்து முழுவதும் தீ பரவியது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். பின்னர் போலீஸார் வந்தனாவை கைது செய்தனர்.
முடியவில்லை
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் பூர்வாஞ்சல் ஜன் அந்தோலன் சமிதியின் அமைப்பு செயலாளராக உள்ளேன். வாரணாசி வந்த பிரதமரையும் முதல்வரையும் சந்திக்க முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை.
குற்றச்சாட்டு
இதனால் ஆத்திரத்தில் தீ வைத்தேன். நான் அமைதியாக போராடினால் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார். பேருந்துக்கு தீவைத்த வந்தனா உத்தரப்பிரதேசத்தில் இருந்து பூர்வாஞ்சல் பகுதியை தனி மாநிலமாக பிரிக்க நீண்ட காலமாக போராடி வருகிறார்.
உண்ணாவிரதம்
இதை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரது உடல்நிலை மோசமானதால் ஆகஸ்ட் 29-ஆம் தேதி அவரது நலவிரும்பிகள் வற்புறுத்தியதை அடுத்து அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.