இந்திராகாந்தி குடும்பத்தின் புதிய பெண் வாரிசு 'அனுஷியா'!
டெல்லி: இந்திரா காந்தி குடும்பத்தில் புதிதாக ஒரு பெண் குழந்தை சேர்ந்துள்ளது. ஆம்... இந்திரா காந்தியின் பேரனும் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்திக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
முன்னாள் பிரதமர், இந்திராகாந்தியின் மகன் சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தி, தற்போது மத்திய பாஜக அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவரது மகனும் பாஜக எம்பியுமான, வருண்காந்திக்கும், யாமினி என்ற பெண்ணுக்கும், 2011ம் ஆண்டு மார்ச் மாதம் வாரணாசி காமகோட்டீஸ்வரர் கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், கர்ப்பமுற்ற யாமினி டெல்லியிலுள்ள மருத்துவமனையொன்றில் சேர்க்கப்பட்டார். இன்று பிற்பகல் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. நிருபர்களிடம் இதுகுறித்து பேசிய வருண் காந்தி "அழகான பெண் குழந்தையால் நானும், எனது மனைவி யாமினியும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். பெண் குழந்தை பிறந்துள்ளதை நினைத்து எனது ஒட்டுமொத்த குடும்பமும் ஆனந்த கூத்தாடிவருகிறது.
எனது மகளுக்கு அனுஷியா என்று பெயரிட்டுள்ளோம்". இவ்வாறு வருண் காந்தி தெரிவித்தார். மறைந்த சஞ்சய்காந்தியின் சகோதரரான ராஜிவ்காந்தி குடும்பம் காங்கிரஸ் கட்சியை கட்டிக்காப்பாற்றி வரும் நிலையில், சஞ்சய்காந்தி குடும்பம் பாஜகவில் தங்களை அர்ப்பணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.