என் மீதான குற்றச்சாட்டில் 1 சதவீதத்தை நிரூபித்துவிட்டாலும் அரசியலில் இருந்து விலக ரெடி: வருண் காந்தி
டெல்லி: தன்மீதான குற்றச்சாட்டுகளை 1 சதவீதம் நிருபித்துவிட்டால் கூட அரசியலை விட்டே விலக தயார் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி மகன், வருண் காந்தி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு அழகிகள், விபச்சார அழகிகளை வருண் காந்தியுடன் பழக விட்டு, அவர் நெருக்கமான தருணத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்களை வைத்து அவரை மடக்கி பாதுகாப்பு தொடர்பான ரகசியங்கள் திருடப்பட்டதாக பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க வழக்கறிஞர் எட்மாண்ட்ஸ் ஆலன் என்பவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஆயுத வியாபாரி அபிஷேக் வர்மா இந்த வேலையில் ஈடுபட்டதாகவும் ஆலன் தனது கடிதத்தில் கூறியுள்ளார். ஆலனும், வர்மாவும் பிசினல் பார்ட்னர்களாக இருந்தவர்கள். 2012ல் பிரிந்து விட்டனர்.
இந்த குற்றச்சாட்டுகளை வருண் காந்தி முற்றிலுமாக மறுத்துள்ளார். அவர் கூறுகையில், இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டில் 1 சதவீதத்தை நிரூபித்துவிட்டால் கூட, நான் அரசியலை விட்டே விலகி விடுவேன். இதுவரை வெளியாகியுள்ள புகாரில் நான் பாதுகாப்பு துறை சம்மந்தப்பட்ட ரகசியங்களை எடுத்தது பற்றியோ, அதை வர்மாவுக்கு கொடுத்தது பற்றியோ, எந்த ஒரு ஆதாரமும் தெரிவிக்கப்படவில்லை.