ராசி எண், வாஸ்து... வக்கீல்கள் செய்த குளறுபடியால் சிறையில் சிக்கிய ஜெ.
பெங்களூர்: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு தள்ளிப்போனதற்கு வழக்கறிஞர்கள் செய்த குளறுபடியே காரணம் என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அனைத்து தரப்பு இறுதி வாதங்களும் நிறைவடைந்தன. கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா வழக்கில் செப்டம்பர் 20-ம் தேதி (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் திடீரென புதிய மனுவை தாக்கல் செய்தனர். அதில், பாதுகாப்பு காரணங்களுக்காக சிறப்பு நீதிமன்றத்தை பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துத்கு மாற்ற வேண்டும் எனவும், தீர்ப்பு வழங்கும் தேதியை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரினர். இதையடுத்து நீதிபதி டி'குன்ஹா வழக்கின் தேதியை செப்டம்பர் 27-ம் தேதிக்கு மாற்றலாமா? என அவர்களிடம் கேட்டார்.
ராசி எண், வாஸ்து
இந்த தேதியை நீதிபதி டி'குன்ஹா சொன்ன உடனேயே ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் செந்திலும், அசோகனும் மகிழ்ச்சியில் 'சரி' என்றார்கள். மற்ற வழக்கறிஞர்களும் உற்சாகமான முகபாவம் காட்டினார்கள்.
கூட்டுத் தொகை எண் 9
அதற்குக் காரணம், தீர்ப்பு தேதியான 27 -ன் கூட்டுத்தொகை 9 என்பதுதான். ஜெயலலிதாவுக்கு இது ராசியான எண் என்று வக்கீல்களே முடிவு செய்து, 27-ஆம் தேதியை ஒப்புக்கொண்டார்கள்.
சிக்கலைச் சொன்ன வழக்கறிஞர்கள்
வழக்கு விஷயத்தில் ஆரம்பம் முதலே கூர்ந்து கவனம் காட்டி வரும் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, அப்போதே வக்கீல்களிடம் ஓடிப்போய், "அந்த தேதி வேண்டாம் என்றும் அதில் உள்ள சிக்கல்களையும் கூறியுள்ளனர்.
ராசி எண் மாறிப்போச்சு
மேலும், அம்மாவுக்கு அது ராசியான எண் என்பதும் இல்லை. எனக்குத் தெரிந்து இப்போது 7 தான் அம்மாவுக்கு ராசியான எண். அது மட்டுமில்லாமல், 27-ஆம் தேதிக்குப் பின் 10 நாட்கள் கர்நாடகத்தில் தசரா திருவிழா பரபரப்பு தொடரும். எல்லாமே அரசு விடுமுறை நாட்கள். எனவே வேறு தேதியை கேளுங்கள்" என்றார்.
மறுத்த வழக்கறிஞர்கள்
ஆனால் வழக்கறிஞர் அசோகனும், செந்திலும் அதனை ஏற்க மறுத்து, "பரப்பன அக்ரஹாரா அம்மாவுக்கு ராசியான இடம்" என்றார்கள்.
வாஸ்து பார்த்த வழக்கறிஞர்கள்
மேலும், வெளியே வந்து "பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்தின் வாஸ்து ஜெயலலிதாவுக்கு சாதகமானது. அதில் குற்றவாளி கூண்டு வடக்கு நோக்கி இருக்கும். உள்ளே நுழையும் நீதிமன்ற கதவு மேற்கு நோக்கி இருக்கும். இதுதான் சரியான பொருத்தம். வாஸ்துவும் ராசியான எண்ணும் ஒரே நேரத்தில் அமைந்திருக்கிறது என்றெல்லாம் சொன்னார்களாம்.
கோட்டை விட்ட வழக்கறிஞர்கள்
இதைக் குறிப்பிடும் வேறு சில வக்கீல்கள், "ஒருவேளை தசரா விடுமுறைக்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ தீர்ப்பு தேதியை கேட்டு வாங்கி இருந்தால் ஜாமீன் கேட்டு வாங்குவதில் இத்தனை சிக்கல் இருந்திருக்காது.
வாய்த வாங்கத் தெரியலையே
18 ஆண்டுகளாக வாதாடி தங்கள் வசதிப்படி வாய்தா வாங்கத் தெரிந்த இவர்களுக்கு, கர்நாடக மாநிலத்தின் அடிப்படை நடைமுறைகளைப் பற்றி யோசித்து முடிவெடுக்கத் தெரியவில்லையே" என்கின்றனர்.
விஐபி வசதி கேட்காத ஜெ
"ஏ-கிளாஸ் அறையில் இருக்கும் ஜெயலலிதா தனக்கு எவ்வித வி.ஐ.பி வசதியும் கேட்கவில்லை. மற்ற கைதிகளைப் போல அவரும் நடத்தப்படுகிறார் என்று கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ஜெய்சிம்ஹா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
எந்த வசதியும் இல்லை
தான் முன்னாள் முதல்வர், விஐபி என எந்த வசதியும் கேட்கவில்லை.சிறைக்குள் அவருடைய நடவடிக்கைகள் மிகவும் வியப்பை ஏற்படுத்துகின்றன. குளிர்சாதன வசதி,தொலைபேசி வசதி,டிவி வசதி என அவர் குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை.
வழக்கமான உடைகள்
ஜெயலலிதா கடுங்காவல் தண்டனை பெற்றவர் இல்லை. எனவே அவருடைய விருப்பப்படி வழக்கமான உடைகளை அணிய அனுமதித்திருக்கிறோம்.
யாரையும் சந்திக்காத ஜெ
சிறைக்காவலர்கள் மற்றும் அதிகாரிகளிடம் மிகவும் நாகரிகமாக நடந்து கொள்கிறார். ஜெயலலிதா ஆரோக்கியமாக இருக்கிறார். தன்னை பார்க்க வரும் யாரையும் அவர் சந்திக்க விரும்பவில்லை என்றும் சிம்ஹா கூறினார்.
ஜெ. சந்திக்க மறுக்கும் காரணங்கள்
பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா இருக்கும் அறைக்கும் பார்வையாளர் அறைக்கும் வந்து சென்றால் குறைந்தது ஒரு கிலோமீட்டர் ஆகுமாம். அவ்வளவு தூரம் அவரால் நடந்து வர இயலாது. மேலும், சீரான வராண்டா வழியாகவும் வர முடியாதாம்.கிரவுண்டுக்குள் இறங்கி, மணலில் நடந்துதான் வர வேண்டுமாம். எனவே, ஜெயலலிதாவால் யாரையும் பார்க்க வரமுடியவில்லையாம்.
கம்பீரமான ஜெயலலிதா
போயஸ் கார்டனிலோ தலைமைச் செயலகத்திலோ கம்பீரமாகவும் திருத்தமான உடைகளுடனும் காட்சி தரக்கூடியவரால் அப்படி சிறையிலும் இருக்க முடியாது எனவே சிறையில் உள்ள சூழலில் யாரையும் சந்திக்க வேண்டாம் என நினைக்கிறார் ஜெயலலிதா என்கின்றனர்.