கட்சி பேதம் மறந்து.. ஜோதிராத்தியா சிந்தியாவை கட்டியணைத்து நெகிழ்ந்த வசுந்தரா.. காரணம் தெரியுமா?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் பதவியேற்பு விழாவில், மத்திய பிரதேச காங்கிரஸ் முன்னணி தலைவரும், அம்மாநில முதல்வர் பதவிக்கான பந்தையத்தில் கமல்நாத்துக்கு போட்டிகொடுத்தவருமான ஜோதிராத்தியா சிந்தியாவிற்கு, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தராராஜே சிந்தியா ஆசி வழங்கிய போட்டோ வைரலாகியுள்ளது.
ராஜஸ்தானில், நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் 99 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது காங்கிரஸ். இதையடுத்து, அங்கு முதல்வராக அசோக் கெலாட் தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது.
ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற முதல்வர் பதவியேற்பு விழாவில், முதல்வர் பதவியிலிருந்து வெளியேறும், வசுந்தராராஜே சிந்தியாவும் பங்கேற்றார். மத்திய பிரதேச காங்கிரஸ் முன்னணி தலைவர் ஜோதிராத்தியா சிந்தியாவும் கலந்து கொண்டார்.
அரசியலில் இருவேறு துருவங்களாக இருந்தாலும், ஜோதிராத்தியா சிந்தியாவை கட்டியணைத்து, வாழ்த்தினார் வசுந்தரா ராஜே சிந்தியா. அப்படி என்ன பாசம், ஜோதிராத்தியா மீது வசுந்தராவிற்கு என்ன கேள்வி எழலாம். தானாடாவிட்டாலும் தன் தசையாடுமல்லவா.. அதுதான் இது.
ஆம்.. வசுந்தராராஜேவின் சொந்த அண்ணன் மாதவராவ் சிந்தியாவின் மகன்தான், ஜோதிராத்தியா. 2001ம் ஆண்டு மாதவராவ் விமான விபத்தில் உயிரிழந்தார். மத்திய பிரதேசத்தின் அரச குடும்பத்தை சேர்ந்த இவர்களின் குடும்பம், அரசியல் ரீதியாக பிரிந்து கிடக்கிறது.
வசுந்தரா ராஜே தாய், விஜயராஜே சிந்தியா, பாஜகவின் நிறுவன தலைவர்களில் ஒருவர். வசுந்தராவின் மகன் துஷ்யந்த் பாஜக எம்.பி.யாக உள்ளார். ஆனால், வசுந்தர சகோதரரான மாதவராவ் சிந்தியாவோ, காங்கிரசின் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்தவர். மத்திய அமைச்சர் பதவி வகித்தவர். அவரது மகனான ஜோதிராத்தியா, காங். தலைவர் ராகுல் காந்தியின் முக்கியமான ஆலோசகர்களில் ஒருவர்.
மத்திய பிரதேச முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்தபோதிலும், கமல்நாத்திற்காக அதை விட்டுக்கொடுத்தவர் ஜோதிராத்தியா.