ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநில முதல்வர்கள் ராஜினாமா
ராஜஸ்தான், சட்டீஸ்கர் முதல்வர்கள் ராஜினாமா செய்தார்கள்
Recommended Video
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான், சத்தீஷ்கரில் பாஜக தோல்வியை தழுவியது. காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, சத்தீஷ்கர் முதல்வர் ரமன் சிங் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே இருவரும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
ராஜஸ்தானில் நேற்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கும்போதே, ஆரம்பத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்றாலும், பின்னர் மீண்டும் பாஜக முன்னிலை பெற்றது. இறுதியில் பாஜவை வீழ்த்தி, காங்கிரஸ் வெற்றி பெற்றது.
அங்கு 199 தொகுதிகளில் தேர்தல் நடந்த நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான 101 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. பாஜக 73 தொகுதிகளை கைப்பற்றி தோல்வி அடைந்தது. பகுஜன் சமாஜ் 6 இடங்களையும், மற்ற கட்சிகள் 19 இடங்களையும் கைப்பற்றின.
காங்கிரசுக்கு வாழ்த்து
இதையடுத்து, அம்மாநில முதல்வர் வசுந்தரா ராஜே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் கருத்து கூறும்போது, "ராஜஸ்தானில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு வாழ்த்துகள். கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு அதிகளவில் பணிகளை மேற்கொண்டுள்ளது.
காங்கிரஸ் மும்முரம்
ராஜஸ்தானில் அடுத்து ஆட்சியமைக்கும் கட்சியும் வளர்ச்சி பணிகளை தொடரும் என நம்புகிறேன்" என்றார். இதையடுத்து, ராஜஸ்தானில் ஆட்சி அமைக்கும் பணியில் காங்கிரஸ் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
வலுவான முன்னிலை
ஆனால், சட்டீஸ்கரில் ராஜஸ்தான் போல இல்லாமல், ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் வலுவான முன்னிலை பெற்றது. 90 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் காங்கிரஸ் 67 இடங்களை கைப்பற்றி வெற்றியை உறுதி செய்தது. பெரும்பான்மைக்கு 46 இடங்களே தேவை. ஆனால் பாஜகவோ வெறும் 15 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
15 ஆண்டு காலம்
இதன் மூலம், இந்த மாநிலத்தில் 15 ஆண்டு கால பாஜக ஆட்சிக்கு காங்கிரஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பாஜவின் தோல்வியை தொடர்ந்து, அம்மாநில முதல்வர் ரமன் சிங் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் ஆனந்தி பென் படேலை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தையும் அளித்தார்.
சுயபரிசோதனை
இதுகுறித்து ரமன் சிங் சொல்லும்போது, "சட்டசபை தேர்தலில், பாஜக தோல்வியை தழுவியதற்கான காரணங்கள் குறித்து, சுய பரிசோதனை செய்ய உள்ளோம். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மக்களுக்காக உழைத்ததை என் அதிர்ஷடமாக கருதுகிறேன்" என்றார்.