வசுந்தர ராஜே கொடுத்த 'சிக்னல்..' சிக்கிக் கொண்ட சச்சின் பைலட்.. அசோக் கெலாட் அதிரடியின் பின்னணி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இவ்வளவு அமளிதுமளி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், முன்னாள் முதல்வரும், பிரதான எதிர்க்கட்சி தலைவருமான வசுந்தரா ராஜே இதுவரை வாய் திறக்கவில்லை.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் கலகம் ஏற்படுத்தி வருகிறார்.
வழக்கமாக இது போல எந்த ஒரு மாநிலத்தில் அரசியல் பிரளயம் ஏற்பட்டாலும் முதலில் கோதாவில் குதிப்பது, அம்மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சி தான். அதிலும், எதிர் கட்சியின் தலைவராக இருப்பவர்தான். அடுத்த முதல்வராகும் வாய்ப்பு இருப்பதால் இதை பயன்படுத்திக் கொண்டு அதற்காகத்தான் திட்டமிடுவார்கள். ஆனால் ராஜஸ்தானில் மட்டும் எல்லாம் வித்தியாசமாக இருக்கிறது.
சமூக வலைத்தளத்தில் கூட வாய் திறக்கவில்லை
முன்னாள் முதல்வரும் பாஜகவின் சக்தி வாய்ந்த தலைவராக அறியப்படுபவருமான வசுந்தரா ராஜே, இந்த அரசியல் கலாட்டா பற்றி இதுவரை ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் வசுந்தரா ராஜே. இவ்வளவு பெரிய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கூட அதில் கூட கருத்து தெரிவிக்கவில்லை.
தப்பித்த அசோக் கெலாட் அரசு
30 எம்எல்ஏக்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக சச்சின் பைலட் தெரிவித்தார். ஆனால், சச்சின் பைலட்டுடன் சேர்த்து 19 எம்எல்ஏக்கள் தான் கடைசியில் எதிரணியில் எஞ்சினர். எனவே அசோக் கெலாட் அரசு இப்போதைக்கு, தப்பித்து உள்ளது. இதற்கு முக்கியமான ஒரு காரணம், வசுந்தரராஜே காக்கும் மவுனம்தான். எதிர் தரப்பில், முன்னெடுப்பு எதுவும் நடக்காத நிலையில் சச்சின் பைலட்டை நம்பி செல்வது அரசியல் எதிர்காலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் பலரும் கூட கடைசி நேரத்தில் மனது மாறி விட்டதாக கூறப்படுகிறது.
அமைதி காத்த வசுந்தர ராஜே
முதல்வராக பதவி வகித்த அனுபவம் வாய்ந்த வசுந்தரராஜே, பழம் நழுவி பாலில் விழுவது போன்ற நிகழ்வுகள் நடந்தும், அமைதி காத்தது ஏன் என்பது பற்றிய அரசியல் நோக்கர்கள் சில கருத்துக்களை முன்வைக்கிறார்கள். குறிப்பாக சச்சின் பைலட் பாஜக பக்கம் வருவது வசுந்தரா ராஜேவுக்கு பிடிக்கவில்லையாம். குஜ்ஜார் மற்றும் மீனா ஜாதியினரின் ஆதரவைப் பெற்றவர் சச்சின் பைலட். அவர் பாஜகவுக்கு வந்தால் வசுந்தரா ராஜே அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்ற அச்சம் அவருக்கு இருக்கிறதாம்.
முதல்வர் வேட்பாளராக வாய்ப்பு
சச்சின் இளைஞர். எனவே அடுத்த தேர்தலில் அவரை பாஜக முதல்வர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்தினால் தனது நிலை என்னாகும் என்ற அச்சம்தான் வசுந்தரா ராஜே அமைதிக்கு காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். பொதுவாக ராஜஸ்தானில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. எனவே ஐந்தாண்டு கால முடிவில் ஆட்சி பாஜக வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது எதற்காக நாம் தலையிட்டு முதல்வர் பதவிக்கு மற்றொரு வேட்பாளரை உருவாக்க வேண்டும் என்ற அச்சம் வசுந்தரா ராஜே மனதில் ஓடுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தொலைபேசி அழைப்பு
இன்னும் ஒரு படி மேலே போய் பாஜகவின் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த நாக்பூர் எம்பி ஹனுமான் பெனிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். வசுந்தரா பல காங்கிரஸ் எம்எல்ஏக்களை தொலைபேசியில் அழைத்து, பாஜக இதில் தலையிடாது. நீங்கள் அரசுக்கு ஆதரவை தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார் என்ற குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார். ஹனுமான் பெனிவாலுக்கும், வசுந்தரா ராஜே இடையே ஏற்கனவே கசப்பான உறவு இருந்து வரும் நிலையில் அவரது இந்த கருத்து வெளியானது.
வசுந்தர ராஜே
ஒரு பக்கம் வசுந்தரா ராஜே அமைதியாக இருந்ததன் காரணமாகத்தான், அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் தலைமை அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. துணை முதல்வர் பதவி மற்றும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட்டை உடனடியாக நீக்கி அதிரடி கட்டியது காங்கிரஸ். இப்போது எம்எல்ஏ பதவியை பறிக்கும் வகையில், விளக்கம் கேட்டு சச்சின் மற்றும் மொத்தம் 19 எம்எல்ஏக்களுக்கு, நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.