இந்நேரம் ராஜமாதா இங்கிருந்தால்.. மருமகன் சிந்தியாவுக்கு அத்தை வசுந்தராஜே செம்ம வாழ்த்து
ஜெய்ப்பூர்: தனது மருமகன் ஜோதிராதித்யா சிந்தியா பாஜகவில் இணைந்திருப்பதற்கு ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்த்ரா ராஜே சிந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசமே முக்கியம் என்று வந்துள்ளதை நம் ராஜமாதா இந்நேரம் பார்த்திருந்தால் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார் என்று கூறி உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக திகழ்ந்தவர் ஜோதிராதித்யா சிந்தியா. இந்த சிந்தியா யார் என்றால், குவாலியர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாத்தா ஜிவாஜிராவ் சிந்தியா சமஸ்தானத்தின் அரசின் கடைசி மன்னர் ஆவார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் ஜோதிராதித்ய சிந்தியா மத்திய அமைச்சராக இருந்தவர். 2008ம் ஆண்டு தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சராக பொறுப்பேற்றார். 2009 முதல் 2012 வரை மத்திய தொழில் வர்த்தகத்துறை இணை அமைச்சராக இருந்தார். பிறகு மின்சாரத் துறை இணையமைச்சராக (தனிப் பொறுப்பு) பதவி வகித்தார். அமைச்சராக பல தைரியமான முடிவுகளை எடுத்து பாராட்டுக்களை பெற்றவர்.
பூர்வோத்திரத்தை புரட்டினால் ஜோதிராதித்யா சிந்தியா பாஜகவுக்கு தாவியதில் துளிகூட ஆச்சரியமே இல்லை!
முதல்வர் பதவி
மக்கள் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடியவராகவும் இருந்ததார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் இளம் அமைச்சர்களில் முக்கியமானவராகவும் ராகுல் காந்தியின் நம்பிக்கைக்கு உரியவராகவும் திகழ்ந்தார். மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற போது சிந்தியாதான் முதல்வர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மூத்த தலைவரான கமல் நாத்தை முதல்வராக்கியது காங்கிரஸ். அப்போது இருந்தே கொஞ்சம் அதிருப்தியில் இருந்தார்.
திடீர் போர்க்கொடி
இந்நிலையில் திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்பு 22 எம்எல்ஏக்ககளுடன் முதல்வர் கமல்நாத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். சிந்தியாவை முதல்வராக்க விரும்பிய 22 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தவாக கடிதம் கொடுத்துள்ளனர். இன்னமும் சபாநாயகர் கடிதத்தை ஏற்றாரா இல்லையா என்பது தெரியவில்லை.
பாஜகவில் சிந்தியா
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சிந்தியா திடீரென நேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்தார். இன்று முறைப்படி பாஜகவில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் சிந்தியா பாஜகவில் இணைந்தார். இதையடுத்து சிந்தியாவின் அத்தையும் ராஜஸ்தான் மாநில முதல்வருமான வசுந்த்ரா ராஜே, தனது மருமகன் தன் பணியாற்றும் பாஜகவிற்கே வந்திருப்பதை கண்டு பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார்.
வசுந்த்ரா ராஜே
இது தொடர்பாக வசுந்த்ரா ராஜே சிந்தியா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இந்நேரம் தேசமே முக்கியம் என நீங்கள் பாஜகவுக்கு வந்திருப்பதை நாம் ராஜமாதா .இந்நேர இங்கே இருந்து பாத்திருந்தால் நிச்சயம் பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். உங்கள் தன்மை மற்றும் தைரியத்தின் பலத்தை நான் பாராட்டுகிறேன். ஒரே அணியில் இருப்பது நல்லது. பாஜகவுக்கு வருக என பதிவிட்டுள்ளார்.