ஓவரா பேசினால் இப்படித்தான் ஊத்திக்கும்.. எப்படி டெபாசிட்டை பறி கொடுத்திருக்கார் பாருங்க வாட்டாள்!
Recommended Video
பெங்களூர்: தமிழர்களுக்கு எதிராக கடும் போராட்டங்களை நடத்தி வந்த வாட்டாள் நாகராஜ் டெபாசிட்டை இழந்து தோல்வியடைந்திருந்தார்.
கர்நாடகாவில் காவிரி பிரச்சினையின்போதெல்லாம், அவர், வந்துவிட்டாரா, இனி ஜலங்கை கட்டி ஆடுவாரே என என தமிழர்களுக்கு கிலி உண்டு செய்து வருபவர் வாட்டாள் நாகராஜ்.
மகதாயி உள்ளிட்ட பல நதிநீர் பிரச்சினைகளில் வாட்டாள் நாகராஜ் குரல் கொடுத்தாலும், காவிரி அல்லது தமிழர்களுக்கு எதிரான பிரச்சினைகள் என்றால் ரொம்பவே ஆவேசமாகிவிடுவார்.
பல தேர்தல்கள்
இப்படிப்பட்ட வாட்டாள் நாகராஜ், சாம்ராஜ்நகர் தொகுதியில் இருந்து இருமுறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆனால் கடந்த பல தேர்தல்களாக இவருக்கு தோல்வியைத்தான் பரிசளித்து வருகிறார்கள் மக்கள். 1996ம் ஆண்டு கன்னட சலுவளி வாட்டாள் பக்ஷா என்ற பெயரில் அமைப்பை துவங்கி நடத்தி வருகிறார். கன்னட போராட்ட கட்சி என்பதுதான் இதன் அர்த்தம். பிற கன்னட அமைப்புகளுடன் இணைந்து, அவ்வப்போது விதவிதமான போராட்டங்களை நடத்தி வந்தார் வாட்டாள் நாகராஜ். எருமை மாட்டு மீது ஏறி செல்வது, கழிவறை கோப்பைகளுடன் படுத்து கிடப்பது, கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைப்பது என இவரது போராட்ட வழி முறைகள் வித்தியாசமாக இருக்கும்.
விவசாயிகள் ஆதரவு
எப்படியாவது மீண்டும் ஒருமுறை வெற்றி பெற்று எம்எல்ஏவாகிவிட வேண்டும் என்று தீவிரம் காட்டிய வாட்டாள் நாகராஜ், இம்முறையும், சாம்ராஜ்நகரில் போட்டியிட்டார். கர்நாடக பிரஜா சம்யுக்தா ரங்கா என்ற பெயரில் புதிய கட்சியை உருவாக்கி இம்முறை அவர் களம் கண்டார். இருப்பினும் தேர்தல் ஆணையம் அவரது சலுவளி கட்சி பெயரைத்தான் தேர்தலுக்கு ஒதுக்கியிருந்தது. வெற்றி பெற உத்வேகம் காட்டிய வாட்டாள், விவசாய அமைப்புகள் சிலவற்றின் ஆதரவையும் தனக்கு பெற்றார்.
வித்தியாசம்
ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு இலவசமாக தலைமுடி வெட்டிவிடுதல், ஷேவிங் செய்வது, கழுதைகள் வளர்ப்புக்கு முக்கியத்துவம் தருவது, கழுதையை தேசிய விலங்காக அறிவிப்பது, காதல் திருமணம் செய்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி அளிப்பது, ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட், வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கு முக்கியத்துவம், கிராமக் கோயில்களை சீரமைத்தல் உள்ளிட்ட பல ஈர்ப்புமிக்க தேர்தல் வாக்குறுதிகளையும் அளித்தார்.
டெபாசிட் இழந்த வாட்டாள் நாகராஜ்
ஆனால் வாட்டாள் நாகராஜை மக்கள் புறக்கணித்தது புறக்கணித்ததுதான் என்பது இந்த தேர்தலிலும் தெரியவந்தது. சாம்ராஜ்நகர் தொகுதியில் காங்கிரசின் புட்டரங்கஷெட்டி 75963 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் மல்லிகார்ஜுனப்பா 71050 வாக்குகள் பெற்றார். மஜத கூட்டணியில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மல்லிகார்ஜுனசாமி 7134 வாக்குகளை பெற்றார். வாட்டாள் நாகராஜ் 5977 வாக்குகளைத்தான் பெற முடிந்தது. இதனால் வாட்டாள் நாகராஜ் டெபாசிட் இழந்து தோற்றுள்ளார்.
வெறுப்பு அரசியல்
சுயேச்சையான ஹொன்னுரைய்யா 904 வாக்குகள், சமன்ய ஜனதா கட்சி வேட்பாளர் நாராயணசாமி 556, சுயேச்சை வேட்பாளர் ரங்கசாமி 552, சுயேச்சை சுரேஷ் 540 வாக்குகளை பெற்றனர். வாட்டாள் நாகராஜை மக்கள் புறக்கணித்துள்ளது, அவரின் வெறுப்பு அரசியலில் கன்னட மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை வெளிக்காட்டுவதாக உள்ளது. வெறுப்பு விதை எங்கே தூவப்பட்டாலும், அங்கெல்லாம் மக்கள் வாட்டாளை புறக்கணிப்பதை போல புறக்கணிக்க வேண்டும் என்ற பாடத்தை வாட்டாள் நாகராஜின் தொடர் மோசமான தோல்விகள் எடுத்துக் காட்டுகின்றன.