தமிழகத்துக்கு காவிரி நீர் தர எதிர்ப்பு- செப்.15-ல் தொடர் ரயில் மறியல் போராட்டம்: வாட்டாள் நாகராஜ்
பெங்களூரு: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து வரும் 15-ந் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று கன்னட சலுவாளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புப் படி தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை திறந்துவிடாமல் இருந்து வருகிறது கர்நாடகா. இதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு 15,000 கன அடி நீரைத் திறந்துவிட உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் காவிரியில் கர்நாடகாவும் நீரை திறந்துவிட்டது.
பந்த்
ஆனால் தமிழகத்துக்கு நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது. நேற்று கர்நாடகா தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் கர்நாடகாவின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
மனித சங்கிலி
இன்றும் 6-வது நாளாக மாண்டியா பகுதியில் போராட்டம் நடைபெற்றது. மாண்டியாவில் பெண்கள், விவசாயிகள் இணைந்து மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ரயில் மறியல்
இதனிடையே வரும் 15-ந் தேதியன்று ரயில் மறியல் போராட்டத்தை நடத்துவோம் என வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார். அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் பீதி
கர்நாடகாவில் தொடரும் தமிழகத்துக்கு எதிரான போராட்டங்களால் தமிழர்கள் பெரும் பீதியில் உறைந்துபோயுள்ளனர். ஏற்கனவே தமிழர்களை தாக்குவோம் என சில கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் வாட்டாள் நாகராஜ் மீண்டும் போராட்டத்தை அறிவித்திருப்பது தமிழர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.