தமிழக-கர்நாடக எல்லையை மூடும் போராட்டம்.. ஒசூர் எல்லையில் வாட்டாள் நாகராஜ் கைது
பெங்களூர்: தடையை மீறி, தமிழக-கர்நாடக எல்லையான அத்திபெலே பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் கைது செய்யப்பட்டார்.
காவிரியிலிருந்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து, தமிழக- கர்நாடகா எல்லையை மூடும் போராட்டத்தை அறிவித்திருந்தார் வாட்டாள் நாகராஜ். இதையடுத்து எல்லை பகுதியான அத்திபேலேவுக்கு தொண்டர்களுடன் புறப்பட்ட நாகராஜ், அங்கு போராட்டத்தை தொடங்கினார்.
பெங்களூர் நகரம் முழுக்க 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதை போலவே அத்திபெலேயிலும் தடையுத்தரவு தற்போது அமலில் உள்ளது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள், தமிழக அரசுக்கு எதிராகவும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, தமிழக எல்லை ஆரம்பிக்கும் ஒசூர் பகுதியில் கன்னட அமைப்பினர் அதிகமாக போராட்டங்களில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.